எமர்ஜென்சியை வென்றார்.. எமனையும் வெல்வார் கருணாநிதி.. தீவிர நம்பிக்கையில் தொண்டர்கள்!
தொண்டர்கள் மருத்துவமனை வாயிலில் பதாகைகளை உயர்த்தி பிடிக்கின்றனர்.
சென்னை: மருத்துவமனை வாயிலில் குழப்பம், பயம், பதட்டம் நிறைந்த தொண்டர்கள்...
சில தினங்களாகவே தங்கள் குடும்பத்தை மறந்தார்கள்... தூக்கத்தை தொலைத்தார்கள்... தன்னிலை மறந்து தொண்டை தண்ணீர் வற்ற கத்தி குரலெழுப்புகிறார்கள்... அந்த குரலின் ஓசை தலைவா, எழுந்து வா என்று கேட்டு மருத்துவமனையையே அதிர வைக்கிறது...
தாங்கள் யார், எங்கிருந்து வந்திருக்கிறோம், என்ன நிலைமையில் இருக்கிறோம் என்று பசி உட்பட எந்த உணர்வும் தெரியாமல் தூக்கம் நிறைந்த கண்களுடன் மருத்துவமனையை நோக்கியே பார்வை செலுத்தி வருகின்றனர்...
கூடவே தங்கள் தலைவரின் 50 ஆண்டு கால வரலாற்றை ஓரிரு வார்த்தைகளில் சுருக்கி அதை பதாகையாக உயர்த்தி பிடித்து காட்டுகின்றனர்... அந்த பதாகைகள் கருணாநிதியின் ஒட்டுமொத்த வாழ்வியலை பிரதிபலிக்கிறது... கருணாநிதியின் அரசியில் சாணக்கியணத்தனத்தையும், அறிவையும், செந்தமிழையும் வெளிப்படுத்தி காட்டுகிறது....
தொலைக்காட்சி உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொண்டர்கள் உயர்த்தி பிடிக்கும் பதாகைகள் பேசப்பட்டு வருகின்றன... அதில், "எமர்ஜென்சியை வென்றார் இன்று எமனையும் வெல்வார்" என்கிறார் ஒரு தொண்டர்.
"மரணத்தை கண்டு அஞ்சியதில்லை.. அந்த மரணமே உங்களை கண்டு அஞ்சும்.. மீண்டு வா.. அஞ்சுகம் பெற்ற புதல்வனே" என்று மற்றொரு வாசகம்... இப்படிப்பட்ட வாசகங்கள் வெறும் வார்த்தைகளால் புனையப்பட்ட கற்பனை வார்த்தைகள் இல்லை...
கருணாநிதி என்ற மாபெரும் அரசியல் ஞானியின் செயல்பாடுகே வார்த்தைகளால் உணர்ந்து தொண்டர்கள் எழுதி, தங்கள் பதாகைகளை தூக்கி பிடித்து காட்டுகின்றனர். அதனால்தான் அந்த பதாகைகளின் வார்த்தைகள் கூட பேசப்படுகிறது.