வாக்கு எண்ணிக்கை துவங்கியது: 9 மணி முதல் முன்னணி நிலவரம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.
தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. அரவக்குறிச்சி, தஞ்சை தவிர 232 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 596 வாக்குப்பதிவு எந்திரங்களும், 75 ஆயிரத்து 980 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
தமிழகத்தில் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாநிலத்திலேயே சென்னையில் தான் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலின்போது பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்கியது.
மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 9 ஆயிரத்து 621 பேர் ஈடுபட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காலை 9 மணியில் இருந்து முன்னணி நிலவரம் குறித்து தெரிய வரும் என்று கூறப்படுகிறது.
வாக்குகள் எண்ணப்படுவது வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தலைமைச் செயலகத்தில் இருந்து கொண்டே வாக்கு எண்ணிக்கையை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அனுமதி பெற்ற ஏஜெண்டுகளை தவிர வேறு யாரும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்ல முடியாது. ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்போனை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.