ஜெயலலிதா தமிழ்நாட்டிலேயே வைத்திருக்க எனக்கு ஓட்டுப் போடுங்க… தயாநிதி மாறன்
சென்னை: உங்கள் வாக்குகளை எனக்கு போடுங்கள்... அம்மாவை தமிழ்நாட்டிலேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதிமாறன் கூறியுள்ளார்.
திமுக வேட்பாள தயாநிதிமாறன் தனது மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாகச்சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரசாரத்தில் தயாநிதி மாறன் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளையும், மத்திய அமைச்சராக இருந்த போது நிறைவேற்றிய திட்டங்களையும் பட்டியலிட்டு பேசினார்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்
அவர் கூறும்போது, ‘‘சென்னை மாநகரில் குடிநீர் பற்றாக்குறையை தீர்த்தவர் கலைஞர்தான். ஆயிரம் கோடி ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். மின் தட்டுப்பாட்டையும் நீக்கினார் என்றார்.
மின்வெட்டுப் பிரச்சினை
இன்று மக்கள் மின்வெட்டு உள்பட பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி அல்லல்படுகிறார்கள். இதில் இருந்து மீள உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.
தமிழ்நாட்டில் அம்மா
சாலையோரங்களில் நின்றிருந்தவர்களிடம் வாக்கு சேகரித்த தயாநிதிமாறன், அதிமுகவினர், அவர்களின் தலைவியை வருங்கால பிரதமர், நாட்டின் பிரதமராகப் போகிறவர் என்று சொல்லி வாக்கு கேட்கின்றனர். ஆனால் நீங்கள் திமுகவிற்கே வாக்களியுங்கள். அந்த அம்மாவை தமிழ்நாட்டிலேயே தங்க வைத்துவிடுங்கள் என்றார்.