வாக்காளர்களே.. பெயர் சேர்க்க, நீக்க, திருத்த இன்று சிறப்பு முகாம்.. பயன்படுத்திக்கோங்க!
சென்னை: வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களைச் சேர்க்க, தவறுகளைத் திருத்த, பெயர்களை நீக்க இன்று சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதேபோல பிப்ரவரி 6ம் தேதி இன்னொரு முகாம் நடைபெறவுள்ளது.
இதைப் பயன்படுத்தி வாக்காளர்கள் திருத்தங்களை மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் 1-1-2016 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் படிவம் 6-ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7-ஐ பூர்த்தி செய்தும், பதிவுகளில் திருத்தம் தொடர்பாக படிவம் 8-ஐ பூர்த்தி செய்தும், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் இடம் பெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 8ஏ-யினை பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் வாக்காளர் பதிவு அலுவலர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
இன்றும் வருகிற பிப்ரவரி 6ம் தேதியும் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அச்சமயம் பொதுமக்கள் உரிய படிவங்களை பெறவும், பூர்த்தி செய்த படிவங்களையும் சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களில் சேர்ப்பிக்கவும் செய்யலாம்.
அதேபோல www.elections.tn.gov.in என்ற தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலமாகவும் பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாகவும் விண்ணப்பிக்கலாம்.
சென்னை மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள பொதுச்சேவை மையங்களில் ரூ.10 செலுத்தி அனைத்து விதமான விண்ணப்பங்களையும் பதிவு செய்யலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த தொடர் திருத்தத்தை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் ஆகியவைகளை மேற்கொள்ளலாம்.