வாக்காளர்கள் கவனத்திற்கு... "டாப்லெட்டுடன்" வருகிறார்கள் அரசு அலுவலர்கள்.. தகவல்களைப் பதிய!
சென்னை: வீடு வீடாக வந்து வாக்காளரின் தகவல்களை பதிவு செய்ய ''டாப்லெட்" கருவியை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
இந்த முன்னோடித் திட்டம் கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதியில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருத்தங்கள்
தமிழகத்தில் மொத்தம் 5.62 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தி தகவல்களை உறுதி செய்யும் திட்டம் மார்ச் 3-ந் தேதி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வாக்காளர்களின் ஆதார் எண், செல்போன் எண், இமெயில் முகவரி போன்ற தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.
76 சதவீதம் நிறைவு
அதுபோல் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் சேர்க்கை, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களிலுள்ள பெயர் நீக்கம் உட்பட அனைத்து திருத்தங்களையும் மேற்கொள்வதற்காக அதற்கான விண்ணப்பங்களைப் பெறும் பணியும் நடந்து வருகிறது. அந்த வகையில் மொத்த வாக்காளர்களில் 76 சதவீதமான 4கோடியே 26 லட்சம் வாக்காளர்களின் தகவல்கள் பெறப்பட்டு, 3கோடியே 15 லட்சம் (56 சதவீதம்) வாக்காளர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன.
டாப்லெட் திட்டம்
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதியில் முன்னோடித் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ். இணைப்பைக் கொண்ட ‘'டாப்லெட்"கள் வழங்கப்படும்.
உடனுக்குடன் சரிபார்ப்பு
இந்தத் திட்டத்தின்படி வாக்காளர்களிடம் சேகரிக்கப்படும் தகவல்கள் மற்றும் பெறப்படும் விண்ணப்பங்களில் உள்ள தகவல்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு அங்கேயே சரிபார்க்கப்படும். இந்தப் பணிகளை வாக்காளர்களின் வீடுகளுக்கு வந்து அலுவலர்கள் மேற்கொள்வார்கள்.
வீட்டிற்கு வந்தே....
வீட்டில் வைத்தே ஆதார் எண் பெறுதல், விரல் ரேகை - கருவிழிப்படலம் பதிவு, புகைப்படம் எடுத்தல், பெறப்படும் தகவல்களுக்கான ஆதார ஆவணங்கள் பதிவு போன்றவற்றை அங்கேயே அலுவலர்கள் மேற்கொள்வார்கள். இந்த டாப்லெட், ஒவ்வொரு வாக்காளரின் தகவல்களையும் பதிவேற்றிக் கொள்வதை அவரவரின் வீட்டில் வைத்தே நிறைவேற்றிவிட ஏதுவாக அமையும்.
இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்