பெரும்கொடுமை.. ஜெ.வை பார்க்க துடிக்கும் தொண்டனுக்கு தடியடி! யார்யாரோ எளிதாக அஞ்சலி செலுத்துவதா?
சென்னை: 'அம்மா' 'அம்மா' என கதறியபடியே தங்களது தலைவியின் முகத்தை கடைசியாக ஒருமுறையேனும் பார்த்துவிட போலீஸின் தடியடிகளை தாங்கிக் கொண்டு ராஜாஜி ஹால் வளாக வரிசையில் உயிரை கையில் பிடித்தபடி ஓடுகிறார்கள் அதிமுக தொண்டர்கள்... ஆனால் நாங்களெல்லாம் விஐபிகள் என்ற பந்தாவில் அரசியல் பிரபலங்களும் திரை நட்சத்திரங்களும் எளிதாக அஞ்சலி செலுத்திப் போவதுதான் கொடுமையாக இருக்கிறது...
செப்டம்பர் 22... முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள்முதலே தங்களது தலைவிக்காக அப்பல்லோ வளாகத்தையே வீடாய் கொண்டவர்கள் பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள்... சோறு தண்ணியில்லாமல் மழையிலும் பனியிலும் பிரார்த்தித்தபடி தவமாய் தவமிருந்தவர்கள் தொண்டர்கள்...
எப்படியும் தங்களது தலைவி நலமுடன் வீடு திரும்புவார் என நம்பிக்கையோடு காத்திருந்த அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அப்படியொரு பேரிடியை தந்தது அப்பல்லோ மருத்துவமனை... ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு என்ற செய்தி கேட்டு மார்பிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு அலை அலையாய் அப்பல்லோவை நோக்கி படை படையாய் குவிந்தனர் அதிமுக தொண்டர்கள்...
பித்து பிடித்தவர்களாய்...
நிச்சயம் எங்கள் பிரார்த்தனைகள் வீணாகது என்ற நம்பிக்கையை உயிராக கையில் பிடித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு காலம் வேறு பதிலை சொல்லிவிட்டது... தமிழகம் போற்றிய தங்க தாரகையின் உயிரை காலன் பறித்துக் கொண்ட செய்தியை தாங்க முடியாத நெஞ்சங்கள் அவரது உடல் கொண்டு செல்லப்பட்ட போயஸ் கார்டனுக்கும் உடல் வைக்கப்படும் ராஜாஜி ஹாலுக்குமாக பித்து பிடித்தவர்களாய் அலை மோதியது....
கண்ணீரும் கதறலுமாய்
அண்ணா, பெரியார், காமராஜர், எம்ஜிஆர்... இந்த பெருந்தலைகளின் இறுதி யாத்திரைக்கு இணையாக ராஜாஜி ஹால் வளாகம் மட்டுமல்ல சென்னை மாநகரின் இதயப் பகுதியே தொண்டர்களின் கண்ணீர் கதறலாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது... தாங்கள் பூஜித்த தலைவியின் முகத்தை எப்படியும் கடைசியாக ஒருமுறையேனும் பார்த்துவிடலாம் என்பதற்காக பல மணிநேரம் பல கிலோ மீட்டர் தொலைவு நீண்டு கிடக்கும் கியூவில் நின்றபடி காத்திருக்கிறார்கள்...
குண்டாந்தடி தாக்குதலுடன்...
அய்யய்யோ தலைவியை பார்க்க முடியாமல் நேரம் நகருகிறதே என்ற கொந்தளிப்பில் தடுப்புகளை உடைத்துவிட்டு ராஜாஜி ஹாலுக்குள் பாய்கிறந்து அந்த பாசக் கூட்டம்... சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிற போலீசாரோ அந்த கூட்டத்தின் உணர்ச்சிகளைத் தாண்டி கடமை உணர்வோடு குண்டாந்தடிகளால் தாக்குகிறது... தலைவிக்காக தீக்கு தேக்குமர தேகங்களையே தாரைவார்க்கும் தொண்டர் கூட்டத்துக்கு குண்டாந்தடி எம்மாத்திரம்?
பேழையை பார்த்தோமே...
கிடைக்கின்ற கியூ வரிசைகளில் வெம்பி வெதும்பியபடி நின்று கதறிக் கொண்டிருக்கிறார்கள்.. தலைவியின் முகம் தொலைவில் இருந்தாலும் அந்த பேழை கண்ணில் பட்டுவிட்டதே என்ற வாழ்நாளில் காணக்கிடைக்காத தரிசனத்தின் பெருமூச்சோடுடன் அவர்கள் நகர்ந்து போகிறார்கள்...
அவர்களோ....
ஆனால் தங்களது தலைவிக்காக தாங்கள் செய்த தியாகங்களில் உழைப்புகளில் பிரார்த்தனைகளில் கடுகளவும் செய்துவிடாத... அதிமுக என்றாலே என்னவென்று தெரியாத எத்தனையோ பேர் ஏதோ ஒரு புறக்கடை வாசல் வழியாக நுழைந்து தலைவியின் முகத்தை தரிசித்துவிட்டுப் போவதை தாங்க முடியாதவர்களாகவே இருக்கிறார்கள் தொண்டர்கள்.. திரை நட்சத்திரங்களும் அரசியல் தலைவர்களும் தொழிலதிபர்களும்தான் வாழும் வரை தலைவியை நேரில் சந்திக்க வாய்ப்பு பெற்றவர்கள்... கடைசி முறையேனும் கடை கோடி தொண்டனுக்கும் தலைவியின் தரிசனம் கிடைக்காமல் போவது எந்த வகையில் நியாயம் என்பதைவிட எத்தனை கொடுமையானது என்பதுதான் அதிமுக தொண்டர்களின் கொந்தளிப்பு.