எம்எஸ்வி 5052... இந்தக் காரைப் பார்க்க தவம் கிடந்த விஐபிக்களைத் தெரியுமா?
எம்எஸ்வி என செல்லமாக அழைக்கப்பட்ட மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனுக்கு அமைந்த காரின் நம்பர் பிளேட்டும் எம்எஸ்வி 5052 என்றே அமைந்தது. அவர் இதைக் கேட்டுப் பெறவில்லை.
அன்றைக்கு ஆர்டிஓ ஆபீஸில் கிடைத்த எண் அது. அதையே தன் கறுப்பு நிற ஃபியட் காருக்குப் பயன்படுத்தினார். தொடர்ந்து பல ஆண்டுகள் இந்தக் காரைத்தான் எம்எஸ்வி பயன்படுத்தி வந்தார். முன்புறமாகத் திறக்கும் வகையில் கதவுகள் கொண்ட இந்தக் காரை தானே ஓட்டுவார் எம்எஸ்வி.
அன்றைய நாட்களில் பளபளக்கும் இந்தக் காரை ஓட்டியபடி எம்எஸ்வி வருவதைக் காண ஏராளமான ரசிகர்கள் கோடம்பாக்கம் மேம்பாலத்துக்கு அருகில் தவம் கிடப்பார்களாம்.
அப்படி தவம் கிடந்த இரு விவிஐபிகள், இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம்.
"காலையில் ஏழு மணிக்கெல்லாம் ராஜா என்னைக் கூப்பிடுவார்.. 'பாலு வாடா, அண்ணன் எம்எஸ்வி கார் வரும் நேரம் இது. அவரைப் பார்த்தாலே போதும், இந்த நாள் நல்லா இருக்கும்டா,' என்று அழைப்பார்," என எஸ்பி பாலசுப்பிரமணியமே இளையராஜாவின் கச்சேரி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அந்தக் காரை கடைசி வரை விற்கவில்லை எம்எஸ்வி. இன்றும் கூட பளபளப்பு குறையாமல், நன்றாக ஓடும் நிலையில் உள்ள அந்த எம்எஸ்வி 5052 ஃபியட் அவரது வீட்டில் நிற்கிறது.
கடைசி நாட்களில் ஹூண்டாய் அக்ஸன்ட் TN 07 AM 502 என்ற காரை பயன்படுத்தினார் எம்எஸ்வி. ஆனாலும் அவ்வப்போது தனது செல்ல ஃபியட்டை சுற்றிப் பார்ப்பாராம்.
அப்போது எடுத்த ஒரு படத்தை இங்கே தருகிறோம்!