திமுகவிற்கு தலைமையேற்க அழகிரிக்கு அழைப்புவிடுத்து போஸ்டர்.. நெல்லை அருகே பரபரப்பு
திமுகவிற்கு தலைமையேற்க அழகிரிக்கு அழைப்பு விடுக்கும் போஸ்டரால் நெல்லையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
நெல்லை: நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அழகிரியை திமுகவிற்கு தலைமையேற்க வருமாறு குறிப்பிட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக திமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு இருந்தார் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி. மதுரையில் வசித்து வந்த அவர், எந்த ஒரு கட்சி விழாவுக்கும், கருணாநிதியின் குடும்ப நிகழ்வுக்கும் அழைக்கப்படாமல் இருந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக எந்த தேர்தலிலும் ஜெயிக்க முடியாது. ஸ்டாலினுக்கு பயிற்சி போதவில்லை. அவர் இன்னும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தொடர்ந்து தோல்வி தான் கிடைக்கும் என்று பேசி இருந்தார்.
ஆர்.கே நகர் தோல்வி, அழகிரியின் இந்த பேச்சு ஆகியவை திமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில், நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகெ உள்ள குறும்பலாப்பேரியில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து ஒட்டப்பட்டு இருந்த போஸ்டரில் இருந்த வாசகங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக சார்பில் கீழப்பாவூர் முன்னாள் ஒன்றிய துணை சேர்மன் சுதன் பெயர் குறிப்பிட்டு ஒட்டப்பட்டு இருந்த அந்த போஸ்டரில் விரைவில் கட்சி தலைமை ஏற்று, திமுகவை காப்பாற்றுமாறு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், அந்த போஸ்டரில் கருணாநிதி, அழகிரி மற்றும் தயாநிதி மாறன் ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற்று இருந்தால், அந்த போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.