நான் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவேன்.. மவுனம் கலைத்த டிடிவி தினகரன்
எங்களை யாரும் மிரட்ட முடியாது. கடவுளுக்கும் உண்மைக்கும் மட்டுமே பயப்படுவோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: இப்போது நடப்பது தியாகத்திற்கும் துரோகத்திற்கும் இடையேயான யுத்தம் என்றும், நாங்கள் கடவுளுக்கு மட்டுமே பயப்படுவோம் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவில் பிளவுபட்டிருந்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர் டிடிவி தினகரன் அணி எம்எல்ஏக்கள் தனியாக பிரிந்து சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளனர். 19 எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் தங்கியிருந்து தினசரியும் டிவியில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
தொண்டையில் வலி காரணமாக சில தினங்கள் கழித்து தொண்டர்களை சந்திப்பேன் என்று டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
வலி சரியாகவில்லை
அணிகள் இணைந்து 6 நாட்கள் கழித்து இன்று சென்னையில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தொண்டை வலி இருப்பதால் தொடர்ந்து பேச முடியாது என்று கூறினார். திருப்பூரில் நடைபெறும் திருமணத்திற்கு சென்று விட்டு வந்து விரிவாக பேசுவதாகவும் கூறினார்.
பயமில்லை
யாருக்காகவும் பயந்து புதுச்சேரியில் பதுங்கவில்லை. கட்சியை காப்பாற்றவே தியாக உணர்வோடு புதுச்சேரியில் தங்கியுள்ளனர். அவர்கள் 19 பேரும் தியாக உள்ளத்தோடு தங்கியுள்ளனர்.
கடவுளுக்கு மட்டுமே பயம்
நாங்கள் உண்மைக்காகவும், கடவுளுக்கு மட்டுமே பயப்படுவோம். வேறு யாருக்காவும், எதற்காகவும் பயப்பட மாட்டோம். இது தியாகத்திற்கும் துரோகத்திற்குமான போர். இதில் எங்கள் அணியைச் சேர்ந்த தியாகிகள் வெல்வார்கள்.
பணம் பாயாது
பணம் பாதாளம் வரை பாயும் என்று சில அமைச்சர்கள் கூறி வருகின்றனர். எங்கள் எம்எல்ஏக்களிடம் பணம் பாயாது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை காப்பற்றவும், கட்சியை காப்பாற்றவும் அனைவரும் புதுச்சேரியில் தியாக உள்ளத்தோடு தங்கியுள்ளனர்.