தகிக்க போகுது தமிழகம்... கொளுத்த போகுது வெயில்... தப்பிக்க 'ஜில்' யோசனைகள்
தமிழகத்தில் இந்த ஆண்டு கூடுதலாக வெயிலின் தாக்கம் இருக்கும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளில் இதே கால கட்டத்தில் இருந்த வழக்கமான வெப்ப நிலையைவிட 0.5 டிகிரி அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது கோடை வெயில்...
அனலாக தகிக்கிறது வீடுகளெல்லாம்...
நாள் முழுவதும் குளித்து முடித்ததுபோல் வியர்வை துளிகள்...
மீம்ஸ்களை அள்ளிவிட தயாகிவிட்ட பாசக்கார நெட்டிசன்கள்...
சாலையோரங்களில் தலைதூக்கியுள்ள பழச்சாறு கடைகள்,
துப்பட்டா துணையோடு செல்லும் 'முகமூடி' பெண்கள்...
ஆவி பறக்கும் அனல்காற்றின் அவஸ்தைகள்...
இரவில் புழுக்கம் கூடவே கொசுக்கடி தாக்கமும்...
தமிழகத்தின் தற்போதைய 'சூடான' செய்திகள் இவைகள்தான்...
கடந்த சில நாட்களாகவே தமிழகமெங்கும் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த 15-ந்தேதி 96 டிகிரி அடித்த வெயில், நேற்று முன்தினம் 98 டிகிரியை தொட்டது. அது படிப்படியாக உயர்ந்து வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி தகித்தது. இது வரும் காலங்களில் 115 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை ஆய்வறிக்கை
இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முந்தைய மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் வெப்பநிலை குறித்து நீண்டகால அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் 2 வாரத்துக்கு முன்பு வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது முந்தைய ஆண்டுகளில் இதே கால கட்டத்தில் இருந்த வழக்கமான வெப்ப நிலையைவிட 0.5 டிகிரி அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.
மார்ச்சில் மண்டையைப் பிளக்கும் வெயில்
மார்ச் மாதத்திலேயே வெயில் கொடுமை அதிகமாக இருப்பதால் இன்னும் 2 மாதங்கள் எப்படி வெயிலை சமாளிக்க போகிறோம்? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உறைந்துள்ளனர். நடப்பாண்டு கோடை காலத்தில் வழக்கமான வெப்ப நிலையைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ள அனைவருக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
ஜில்லுன்னு சில யோசனைகள்
கடும் கோடையிலிருந்து நம்மை கொள்ள ஜில்லுன்னு சில யோசனைகள் செய்தாலே வெயிலையும் விரட்டியடிக்கலாம். முதலில் வெயில் காலத்தில் செய்யக்கூடாதவை என்று பார்ப்போம்... கடுமையான வெயிலிலிருந்து வீட்டுக்குள் வந்தவுடன் வியர்வை அடங்குவதற்குள் ஜில் தண்ணீரை குடிக்க வேண்டாம். சளி பிடிக்கும். ஆறிய தண்ணீரே சிறந்தது. பொறித்த உணவுகளுக்கு உடனடி தடா போடுங்கள்... இதனால் சரும நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கார்பன்டை ஆக்ஸைடு நிரம்பிய அடைத்த செயற்கை பானங்கள் கூடவே கூடாது. இவை உடம்பின் எரிச்சலை இன்னும் அதிகப்படுத்தும்.
குச்சி ஐஸ் கூடாது
குச்சி ஐஸ் சாப்பிடக்கூடாது, ஏனெனில் இது வெப்பத்தையும் நோய்களையும் அதிகரிக்கும். ஐஸ்காப்பி, ஐஸ் டீ இரண்டுமே நல்லதல்ல.. வெயிலில் செல்ல குடை தேவை... ஆனால் கறுப்பு நிற குடைக்கு நோ சொல்லிவிடுங்கள். மெல்லிய நிற குடைகளே வெயிலிருக்கு ஏற்றது. உடற்பயிற்சிகள் செய்து அதிக அளவு வியர்வை வந்தால் பயிற்சிகளை சற்றுநேர நிறுத்திவிடுவது நல்லது. வெயில் காலத்தில் சோர்வு, தாகம், பித்தம், சரும சுருக்கம், வேர்க்குரு, தோல் கறுத்து போவது, பசியின்மை, போன்ற பாதிப்புகள் ஏற்படும். இவை, கோபம், பொறுமையின்மை போன்ற மனப்பிரச்சினைகளையும் உருவாக்கிவிடும். சரி... இந்த வெயிலிலிருந்து தப்பித்துக் கொள்ள என்ன செய்யலாம்?
மண் பானை தண்ணீர்
தேவையைவிட அதிகமான நீர் அருந்துவது, வெளியில் வெளியிடங்களில் அலையும்போது இடையிடையே நீர்பழச்சாறு, இளநீர், மோர், நீர்ச்சத்து பழங்களை சாப்பிடுவது உஷ்ணத்தை தணிக்கும். மண் பானை தண்ணீர் மிகவும் நல்லது. இந்த சீஸனில் மாம்பழம் அதிகம் கிடைக்கும். ஆனால் அதனை சூடு என்று சிலர் ஒதுக்கி விடுவார்கள். வேனல் கட்டிகள், வியர்க்குரு போன்ற பாதிப்பு இருப்பவர்களை தவிர மற்றவர்கள் தாராளமாக மாம்பழத்தை உட்கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நெய் தடவி ஊற விட்டு குளிங்க
வெயிலில் அலைந்து திரிந்து வருபவர்கள் எண்ணெய்க்கு பதில் உடலில் நெய் தடவி ஊறவிட்டு குளித்தால், வெயிலில் சருமம் கறுப்படையாதாம். வீடுகளில் ஜன்னல் கதவுகளில் ஈரத்துணி நனைத்து போர்த்தினால் சற்று வெப்பம் தணியும். வெளியில் போகும்போது ஏதாவது சன்ஸ் கிரீம் கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் மாலை-மாலை இரண்டு தடவை குளிப்பது உடலுக்கு குளிர்ச்சி தரும். இரவில் உறங்க செல்லும் முன்பு உள்ளங்கால்களில் விளக்கெண்ணையை தடவிவிட்டு படுத்தால் உடல் குளிர்ச்சியடையும்.
இயந்திரங்கள் பின்னால் போகாமல் இயற்கை முறையில் இவைகளை பின்பற்றினாலே போதும்.. வெயிலையும் வெல்லலாம் எளிதாக... கோடையிலும் இருப்போம் குளுகுளுவென...!