செக் மோசடி வழக்கு.. திமுக எம்.பி. திருச்சி சிவா மகன் சூர்யா சிவாவுக்கு பிடிவாரண்ட்
ரூ.5 லட்சம் செக் மோசடி வழக்கில் திருச்சி சிவா எம்.பி.,யின் மகன் சூர்யா சிவாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
திருச்சி: செக் மோசடி வழக்கில் திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன், சூர்யா சிவாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருச்சி ஜே.எம்-3 நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநிலங்களவை திமுக உறுப்பினரும், திமுகவின் முக்கிய பிரமுகருமான திருச்சி சிவா எம்.பியின் மகன் சூர்யா. திருச்சி திமுக மாவட்ட மாணவரணி அமைப்பாளராக உள்ளார்.
இவர் மீது திருச்சி, மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள ஈச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திமுக புறநகர் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளரான நஜீர் அகமது என்பர் கடந்த 2016 செப்டம்பர் மாதம் 5 லட்ச ரூபாய் கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. 3 மாதத்திற்குள் திருப்பி செலுத்தி விடுவதாக கூறி வங்கி காசோலையை சூர்யா சிவா வழங்கியுள்ளார்.
ஆனால் வங்கியில் போதிய பணமில்லை என காசோலை திரும்ப பெறப்பட்டது. இதையடுத்து நஜீர் அகமது சமயபுரம் காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் 2016 அன்று புகார் அளித்ததார்.
இதன்பேரில், இவ்வழக்கு திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு குற்றவியல் நீதிமன்றம் எண் 3 ல் வழக்கு நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சூர்யா சிவாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து திருச்சி ஜே.எம்-3 நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது.