டிடிவி. தினகரனின் சகோதரி ஸ்ரீதளதேவி, மைத்துன பாஸ்கரனுக்கு கோர்ட் பிடிவாரண்ட்!
டிடிவி. தினகரனின் சகோதரி ஸ்ரீதள தேவி மற்றும் மைத்துநர் பாஸ்கரனுக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சென்னை : சொத்துக்குவிப்பு வழக்கில் டிடிவி. தினகரனின் சகோதரி ஸ்ரீதளதேவி மற்றும் அவரின் கணவர் பாஸ்கரன் உள்ளிட்டோருக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
1977ம் ஆண்டு வருமானத்திற்கு அதிகமாக ரூ. 1.68 கோடி சொத்துக்குவிப்பு செய்ததாக டிடிவி தினகரனின் சகோதரி ஸ்ரீதளதேவி மற்றும் அவரது கணவர் எஸ். ஆர். பாஸ்கரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை சிபிஐ நீதிமன்றம் 2008ம் ஆண்டில் இருவருக்கும் தண்டனையை உறுதி செய்தது.
பாஸ்கரனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஸ்ரீதள தேவிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் இருவருக்கும் ரூ. 30 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் இருவரின் தண்டனையையும் உறுதி செய்தது. இதனையடுத்து இரண்டு பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய நிலையில் ஸ்ரீதளதேவியும், பாஸ்கரனும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இதனையடுத்து இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அடுத்த கட்டமாக இவர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் சட்ட நடவடிக்கை பாயும் நிலை உருவாகியுள்ளது.