விழுந்தது விண்கல் இல்லை... அப்படியானால் நடந்தது என்ன...?
வேலூர்: வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் விண்கல் விழுந்து டிரைவர் பலியானதாக கூறப்படும் சம்பவம் குறித்து நாசா கொடுத்துள்ள விளக்கம், பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
நாட்றாம்பள்ளியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் பிப்ரவரி 6ம் தேதி திடீரென மர்மப் பொருள் வெடித்ததில் பஸ் டிரைவர் காமராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர். அதில் ஒருவர் மாணவர்.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வானிலிருந்து விழுந்த மர்மப் பொருள் வெடித்ததால்தான் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டதால் அது என்ன என்ற விவாதமும் வெடித்தது.
இதுகுறித்து கியூ பிரிவு மற்றும் உள்ளூர் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். அவர்கள் நடத்திய விசாரணைக்குப் பின்னர் அது வெடிபொருள் இல்லை. எனவே விண்கல் விழுந்து அது வெடித்து இறந்திருக்கலாம் என்று கூறினர்.
இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா அவசரம் அவசரமாக ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், விண்கல் வெடித்துச் சிதறியதால்தான் இந்த சம்பவம் நடந்ததாகவும், விண்கல் வெடித்தே காமராஜ் பலியானதாகவும் அவர் தெரிவித்திருந்தார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடும் வழங்கினார்.
இந்த நிலையில் இந்திய விஞ்ஞானிகள் குழு, நாசா ஆகியோர் தற்போது வெடித்தது விண்கல் அல்ல என்று கூறி விட்டனர். இதுகுறித்து நாசா தரப்பு கூறுகையில், இணையதளத்தில் சம்பவ இடத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் கல்லைப் பார்த்தோம். அது நிச்சயம் விண்கல் அல்ல. மாறாக, பூமியைச் சேர்ந்த கல் போலத்தான் தெரிகிறது. பாறைக் கல்லாக அது இருக்கலாம். இதுவரை பூமியில் விண்கல் விழுந்து மனிதர்கள் யாரும் பலியானதாக நிரூபிக்கப்படவில்லை என்று கூறி விட்டனர்.
இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விழுந்து வெடித்தது விண்கல் இல்லை என்றால் விழுந்தது என்ன என்ற கேள்வியும், சந்தேகமும் எழுந்துள்ளது.
யாரேனும் வெடிகுண்டைத் தூக்கி வீசி எறிந்து அது வெடித்துச் சிதறியதா? அல்லது சம்பவ இடத்தில் ஏதேனும் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்ததா? என்று பல்வேறு சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துள்ளன.
வெடிகுண்டு வெடித்தாக வெளியில் செய்தி பரவினால் அரசுக்குக் கெட்டப் பெயர் ஏற்படலாம் என்ற அச்சத்தில் அரசுத் தரப்பும், காவல்துறையும் எதையாவது மறைக்கப் பார்க்கிறார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தி்ல் விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவதற்கு முன்பாகவே வெடித்தது விண்கல் என்ற முடிவுக்கு போலீசாரும் அரசும் எப்படி வந்தனர்.. முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்படி ஒரு தகவலை யார் சொன்னது என்ற கேள்விகளும் எழுகின்றன.