ஜெயலலிதா காவிரி விவகாரம் குறித்து ஆலோசித்த போது நோய் தொற்று ஏற்படவில்லையா?
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினார் என்பது பொய்யா என கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியபோது அவருக்கு நோய் தொற்று ஏற்படவில்லையா என கேள்வி எழுந்துள்ளது. அல்லது காவிரி விவகாரம் குறித்து ஆலோசித்தார் என பொய் சொல்லப்பட்டதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். முதலில் அவருக்கு லேசான காய்ச்சல்தான் என கூறப்பட்டது.
இதையடுத்து ஜெயலலிதா முழு உடல் நலத்துடன் உள்ளார். அவர் காவிரி விவகாரம் குறித்து ஐஎஎஸ் அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறி அறிக்கை வெளியிடப்பட்டது.
எந்த நிலையில் சேர்க்கப்பட்டார் ஜெ.?
இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழக அரசு அவரசஅவசரமாக அப்பல்லோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவ அறிக்கைகளை பெற்று, அவற்றை மேற்கோள் காட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஜெயலலிதா சுயநினைவற்ற நிலையில் தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான நிலையில் ஜெ.
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவரால் யாருடைய குரளையும் உணர முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று விளக்கமளித்த இந்திய மருத்துவ கவுன்சிலும் ஜெயலலிதா மோசமான நிலையில் தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் என கூறியுள்ளது.
யாரும் அனுமதிக்கப்படவில்லை
ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அவரை சந்திக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. கவர்னர், ராகுல்காந்தி, மத்திய அமைச்சர்கள், என பல்வேறு தரப்பினரும் ஜெயலலிதாவை பார்க்க வந்தனர்.
நோய் தொற்றால் அனுமதியில்லை
ஆனால் ஒருவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. சசிகலா மட்டுமே உடனிருந்தார். மற்றவர்கள் ஜெயலலிதாவை சந்தித்தால் நோய் தொற்று ஏற்படும் என்றும் என்பதால் யாருக்கும் அனுமதியில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
காவிரி விவகாரம் - ஆலோசனை
ஆனால் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது, காவிரி பிரச்னை தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியதாக அதிகாரபூர்வமாக கூறப்பட்டது. அப்படி ஜெயலலிதா யாருடன் ஆலோசனை நடத்தினார்.
அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படவில்லையா?
அதில் பங்கேற்ற அதிகாரிகளின் பெயர் என்ன. நோய் தொற்று காரணமாக ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்களை அனுமதிக்காத மருத்துவமனை நிர்வாகம் காவிரி விஷயத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை மட்டும் அனுமதித்தது எப்படி? அவர்கள் மூலம் நோய் தொற்று ஏற்படவில்லையா என கேள்வி எழுந்துள்ளது.
ஆலோசனை என்றது பொய்யா?
அல்லது ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார் என கூறப்பட்டது பொய்யா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. மருத்துவ அறிக்கைகளின் முன்னுக்குப்பின் முரணான தகவல்களால் ஜெயலலிதா மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.