ஜெயலலிதா எழுதி வைத்த உயிலை கொள்ளை அடித்து விட்டார்களா??
கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலையின் பின்னணியில் ஜெயலலிதாவின் சொத்துகள் யாருக்கு என்பது தொடர்பான உயிலை தேடும் முயற்சியாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை: கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை சம்பவத்தின் பின்னணியில் ஜெயலலிதாவின் உயிலுக்கான தேடுதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது கொடநாடு எஸ்டேட். ஜெயலலிதாவுக்கு சொந்தமான இந்த எஸ்டேட்டில் கடந்த 24-ஆம் தேதி புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் நுழைந்தது.
அதனை தடுக்க முயன்ற காவலாளிகளை தாக்கியதில் ஓம்பகதூர் என்ற காவலாளி உயிரிழந்தார். படுகாயமடைந்த கிஷன் பகதூர் என்ற காவலாளி கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தனிப்படை போலீஸ்
பெரும் சந்தேகத்துக்கு ஆளான இந்த எஸ்டேட் காவலாளி கொலை வழக்கு தொடர்பாக விசாரணையை நடத்துவதற்காக டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்நிலையில் ரத்தம் படிந்த கையுறை, நம்பர் பிளேட் ஆகியவை குப்பைத் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்டது.
கிடுக்கிப்பிடி விசாரணை
இந்நிலையில் தனிப்படை போலீஸார் கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிலரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே கொலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட கனகராஜ், சாயன் ஆகியோர் கருதப்படுகின்றனர். இந்நிலையில் ஜெ.வின் முன்னாள் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் சேலம் அருகே விபத்தில் சிக்கி உயிழந்துவிட்டார்.
டேங்கர் லாரி விபத்து
அதேபோல், போலீஸாரிடம் சிக்காமல் இருக்க காரில் மனைவி, குழந்தையுடன் தப்பி சென்ற சயானின் வாகனத்தின் மீது டேங்கர் லாரி மோதியதில் மனைவியும், குழந்தையும் உயிரிழந்துவிட்டனர். சயான் அபாய கட்டத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜெ.வின் வாட்சுகள் காணவில்லை
இந்நிலையில் கொடநாடு எஸ்டேட்டில் இருந்த ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வாட்சுகளும், கிரிஸ்டல் சிலையும் காணவில்லை என்று தகவல்கள் வெளியானது. இந்த வழக்கு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டாலும், வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட கனகராஜ் இறந்துவிட்டதாலும், சயானிடம் விசாரணை நடத்த முடியாத கட்டத்தில் இருப்பதாலும் போலீஸார் திணறி வருகின்றனர். அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தமுடியும் என்று போலீஸார் கருதுகின்றனர்.
இதுதான் காரணமா?
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக ஏராளமான சொத்துகள் உள்ளதாகவும், அதன் மதிப்பு பல கோடிகளை தாண்டும் என்று கூறப்படுகிறது. மேலும் ஜெயலலிதாவுக்கு பிறகு அவரது சொத்துகள் யாருக்கு என்பது தொடர்பான உயில் ஒன்று ஜெயலலிதாவிடமும், மற்றொன்று அவரது நண்பர் சோவிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
எங்கே அந்த 3 சூட்கேஸ்கள்
இந்நிலையில் இருவரும் இறந்துவிட்டதால் அந்த உயிலானது ஜெயலலிதா அடிக்கடி வந்து செல்லும் கொடநாடு எஸ்டேட்டில் இருக்கலாம் என்பதால் அதையும், சொத்து குறித்த தகவல்களையும் தேடி யாரோ வந்திருக்கலாம் என்று தெரிகிறது. மேலும் எஸ்டேட்டில் இருந்த 3 சூட்கேஸ்களைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அதில்தான் சொத்து குறித்த உயில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.