ஆர்.கே.நகர் ஏரியாவில் தண்ணீர் லாரிகள் திடீர் ஸ்டிரைக்.. மக்கள் பெரும் அவதி
சென்னை: மறைந்த ஜெயலலிதா கடைசியாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.கே.நகரில் கடும் குடிநீர்ப் பஞ்சத்தில் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். காரணம் டேங்கர் லாரிகளின் திடீர் ஸ்டிரைக்.
ஆர்.கே நகர் தண்டையார்பேட்டை குடிநீர் நீரேற்று நிலையத்தில் 35 லாரிகள் மூலம் காசிமேடு, புதுவண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்னை குடிநீர் வாரியம் அப்பகுதிகளில் உள்ள தொட்டிகளுக்கு குடிநீர் விநியோகித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை கொருக்குப்பேட்டை பகுதியில் குடிநீர் கொண்டு சென்ற மெட்ரோ வாட்டர் லாரிக்கு இடையூறாக சிலர் ஆட்டோவை நிறுத்தி வைத்துள்ளனர். இதையடுத்து லாரி டிரைவர் கீழே இறங்கி ஆட்டோவை அப்புறப்படுத்த முயன்றுள்ளார். இதையடுத்து 7 பேர் கொண்ட கும்பல் திரண்டு வந்து லாரி டிரைவரை சரமாரியாக அடித்து உதைத்தது.
லாரி டிரைவர் தேசிங்கு மற்றும் கிளீனர் ஜெயசூரியவையும் அந்த மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியதாக ஆர்.கே நகர் காவல் நிலையத்தில் ஓட்டுனர்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் குடிபோதையில் லாரியை இயக்கியதாக புகார் கொடுத்தவர்கள் மீதே வழக்குப் பதிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடிநீர் லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்
இதன் காரணமாக இன்று காலை முதலே அங்கு குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.