சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு!
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
சேலம் : மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அணையின் 8 கண் மதகு வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வருகிறது.
பருவமழை பொய்த்ததோடு, மேட்டூர் அணையிலும் போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் இந்த ஆண்டுகுறுவை சாகுபடிக்கு ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. குறுவை சாகுபடி பாதிக்கப்பட்ட நிலையில் விவவாயிகள் மிகவும் கவலையடைந்திருந்தனர். ஆனால் தென்மேற்குப் பருவமழை தமிழகத்தை சுற்றியுள்ள அண்டை மாநிலங்களில் நல்ல மழையை தந்தது.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பெய்த கனமழையால் தமிழகத்திற்கு அந்த மாநிலங்களில் வர வேண்டிய நீரின் அளவு அதிகரித்தது. இதனால் தமிழகத்திலுள்ள அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்தது. இதே போன்று தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே நீர்திறப்பு செய்யப்படாததால் அணையின் நீர்மட்டம் தற்போது 94 அடியை எட்டியுள்ளது.
மழையின் அளவு அதிகரிப்பு
பொதுவாக, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவத்தில், சுமார் 14 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெற்பயிர் நாற்று நடவு முறை மூலம் சாகுபடி செய்யப்படும். நடப்பாண்டில், இதுநாள் வரை தமிழ்நாடு பெற வேண்டிய இயல்பான மழை அளவான 480.5 மி.மீக்கு 533.4 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது.
நீர் திறக்க உத்தரவு
மேட்டூர் அணையில் தற்போதுள்ள நீர் இருப்பைக் கருத்தில் கொண்டும், இனி வரும் மாதங்களில் கர்நாடகா நீர்த்தேக்கங்களிலிருந்து கிடைக்கக்கூடிய நீரினை எதிர்நோக்கியும் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை இயல்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மேட்டூர் அணையிலிருந்து சம்பா சாகுபடிக்கென இன்று முதல் நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டார்.
மலர் தூவி திறந்து விடப்பட்டது
இதன்படி அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், கருப்பண்ணன், ஆட்சியர் ரோகிணி, செம்மலை எம்எல்ஏ உள்ளிட்டோர் மலர்களைத் தூவி அணையில் இருந்து நீரை திறந்து விட்டனர். அணையில் இருந்து திறந்து விடப்பட்ட நீரை மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.
60 நாட்களுக்குத் திறப்பு
மேட்டூர் அணையின் 8 கண்மதகு வழியாக திறந்து விடப்பட்ட 2,000 கனஅடி தண்ணீர் சீறிப்பாய்ந்து ஓடுகிறது. இதனையடுத்து படிப்படியாக நீரின் அளவு 15,000 கன அடி வரை அதிகரிக்கப்பட உள்ளது. இன்று முதல் தொடர்ந்து 60 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிகிறது, எனினும் நீரின் இருப்பை பொருத்து பாசனத்திற்காக திறந்துவிடப்படும் நாட்கள் அதிகரிக்கும். மேலும் 8 நாட்களில் இந்த நீர் கடைமடை பகுதியை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.