கேரளாவை போல் தமிழக பள்ளிகளில் 'தண்ணீர் பெல்'... அமைச்சர் செங்கோட்டையன் சூப்பர் அறிவிப்பு
Recommended Video
சென்னை: கேரளாவைப் போல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் 10 நிமிடங்கள் தண்ணீர் குடிக்க ஒதுக்கப்படும் என பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் பள்ளி மாணவ மாணவிகள் தண்ணீர் குடிக்க வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தண்ணீர் குடிப்பதற்கு என்றே பாடவேளைகளில் நேரம் ஒதுக்கி தண்ணீர் பருக வைக்கிறார்கள். இது அந்த மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மாணவர்கள் குடிநீர் அருந்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இத்திட்டத்தை கர்நாடகாஅரசும் பின்பற்ற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அம்மாநில கல்வி அமைச்சர் சுரேஷ்குமார் நேற்று அறிவித்தார். இதன்படி தினசரி பள்ளிகளில் 3 அல்லது நான்கு முறை தண்ணீர் பெல் அடித்து மாணவர்களை தண்ணீர் குடிக்க வைப்போம் என்றார்.
இதனிடையே தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்தவையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் என்ற கிராமத்தில் இயங்கும் அரசுமேல் நிலைப்பள்ளியில் மாணவர்கள் பாடவேளைகளில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது.
பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களையும் தண்ணீர் பாட்டிலை வீட்டில் இருந்து எடுத்து வரச்சொல்லி தண்ணீர் பெல் என்று பெல் அடித்து பாட வேளைகளில் தண்ணீர் அருந்துவார்கள். இது குறித்து செய்திகள் இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
இந்நிலையில் சென்னை சாந்தோம் புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தினவிழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், கேரளாவைப்போல் தமிழகத்திலும் பள்ளிகளில் பாட வேளைகளில் தண்ணீர் குடிப்பதற்கு 10 நிமிடம் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்படும் என்றார்.
அத்துடன் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு CA படிப்புக்கு பயிற்சிகளும் இனி அரசு பள்ளிகளில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.