செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளிலிருந்து தண்ணீ திறப்பு குறைப்பு.. !
சென்னை: சென்னையிலும், பல புறநகர்ப் பகுதிகளிலும் வெள்ளக்காடாக மாறக் காரணமாக இருந்த செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரியிலிருந்து வெளியாகி வந்த பெருமளவிலான தண்ணீர் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது.
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளிலேயே பெரியது செம்பரம்பாக்கம் ஏரிதான். தொடர் மழை காரணமாக இந்த ஏரி முழுமையாக நிரம்பி விட்டது.
இதையடுத்து உபரி நீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 18,000 சென்னைப் புறநகர்ப் பகுதிகள் பலவற்றில் நீர் புகுந்து வெள்ளக்காடானது. சென்னையிலும் அடையாறு கரையையொட்டிய பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டது.
மழை ஓய்ந்ததால் நீர் திறப்பு குறைப்பு
தற்போது மழை விட்டு விட்டதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு 10,000 கன அடியிலிருந்து 4,000 கன அடியாக குறைந்துள்ளது. இதனால் ஏரியிலிருந்து வினாடிக்கு 18,000 கன அடியாக திறக்கப்பட்ட தண்ணீர் வெறும் 800 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
இன்னும் வெளியேறாத தண்ணீர்
இருப்பினும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து ஏற்கனவே வெளியேற்றப்பட்ட உபரி நீரால் கோட்டூர்புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீடுகளுக்குள் தொடர்ந்து தண்ணீர் தேங்கியுள்ளது. இன்னும் வெள்ளம் வெளியேறவில்லை.
நதிக் கரையோரம்
சென்னை அரும்பாக்கம் கூவம் நதிக்கரையில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாமில் தங்கவைக்கப்ட்ட கிருஷ்ணன் என்ற முதியவர் உயிரிழந்ததால் உடன் தங்கிருந்தவர்கள் அச்சமடைந்துள்ளனர். அடையாறு ஆற்றங்கரையோரங்களில் வசிக்கும் ஆயிரக்காணக்கான மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளன.
மிதக்கும் வீடுகள்
கோட்டூர்புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றங்கரையோரத்தி்ல கிட்டத்தட்ட ஆற்றுக்கு உள்ளேயே கட்டப்பட்ட வீடுகள் தொடர்ந்து தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் கோட்டூர்புரம் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டு பள்ளிகளில், விளையாட்டு மைதானங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள் வீடு திரும்ப முடியாமல் தவிக்கின்றன.
பூண்டி ஏரி
இதற்கிடையே, பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட நீரின் அளவு 750 கனஅடியாக குறைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து நேற்று 25,000 கனஅடி நீர் திறக்கபப்ட்டது.
கொசஸ்தலை ஆறு
பூண்டி ஏரியில் இருந்து திறக்கப்பட்ட நீர் கொசஸ்தலை ஆற்றில் கலந்தது. கொசஸ்தலை நீரால் மணலி புதுநகர், எழில் நகர், அத்திப்பட்டு புதுநகரில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. வெள்ள ஆபத்தை குறைக்கும் வகையில் பூண்டியில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.