கனமழை: பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகள் நிரம்பின-தாமிரபரணியில் கரைபுரண்டோடும் வெள்ளம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. பாபநாசம் அணை முழு கொள்ளவை எட்டியதை அடுத்து அணைக்கு வரும் 17 ஆயிரம் கன அடி தண்ணீர், அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
இதனால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அகஸ்தியர் அருவி இருந்த இடம் தெரியாமல் மூழ்கி விட்டது. ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 2 மாணவிகள் மீட்கப்பட்டனர்.
காற்றழுத்த தாழ்வு நிலை
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு விக்கிரமசிங்கபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், பாபநாசம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
உபரிநீர் வெளியேற்றம்
கனமழை காரணமாக பாபநாசத்தில் உள்ள பாணதீர்த்த அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. பாபநாசம் அணைக்கு நேற்று மாலை 6 மணி அளவில் 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. ஏற்கனவே பெய்த மழையில் அணை நிரம்பியதால், அணைக்கு வரும் 17 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.
சேர்வலாறு அணை
156 அடி உயரம் கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 151 அடியை கடந்தது. அங்கும் மேலும் நீரினை தேக்க முடியாததால் அணைக்கு வரும் மழைநீரை வினாடிக்கு நான்காயிரம் கனஅடி வீதம் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடுகின்றனர்.மேலும் மழையும் பெய்துவருவதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
மூழ்கிய அகஸ்தியர் அருவி
வெள்ளம் காரணமாக அகஸ்தியர் அருவி மறைந்து எந்த பக்கம் பார்த்தாலும் தண்ணீராக கொட்டியது. கல்யாண தீர்த்தத்தில் 100 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் பயங்கர இறைச்சலுடன் கொட்டியது. இதனால் தண்ணீர் கரைபுரண்டு ஓடி பாபநாசம் தலையணை மறைந்து காணப்படுகிறது.
மூழ்கிய கோவில்
பாபநாசத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. பாபநாசம் கோவிலில் உள்ள அர்த்த சாம மண்டபம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் பாபநாசம் கோவில் முன்பு இருந்த விநாயகர் கோவிலும் தண்ணீரில் மூழ்கியது.
போக்குவரத்து நிறுத்தம்
பாபநாசத்தில் இருந்து காரையாறு செல்லும் பாதையில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு இருந்த பெரிய பாலம் கடந்த 1992-ம் ஆண்டு அடித்துச் செல்லப்பட்டது. அதற்காக அப்போது தற்காலிகமாக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று இரும்பு பாலத்தில் சுமார் 8 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் பாபநாசம்-முண்டந்துறை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய மாணவிகள்
நெல்லை மாவட்டம் பாபநாசம் காணிக்குடியிருப்பு அரசு பழங்குடியினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சூரியகுமார் (வயது 13), மரியசெல்வம் (8) ஆகிய 2 பேரும் நேற்று காலை தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டனர். அப்போது அங்கு குளித்துக் கொண்டு இருந்த மாணவிகள் எழில், செல்வதுரைச்சி ஆகியோர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் மீட்பு
அப்போது அந்த 2 மாணவிகளையும் வெள்ளம் இழுத்துச் சென்றது. அவர்கள் ஆற்றின் நடுவே அமைந்துள்ள பாறையில் உள்ள ஒரு மரத்தின் வேரை பிடித்துக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அவர்களை ரப்பர் டியூப் மூலம் மீட்டனர்.
மிரட்டிய மலைப்பாம்பு
மாணவிகள் பிடித்து இருந்த வேரில் மலைப்பாம்பு ஒன்று இருந்ததை வீரர்கள் அகற்றி மாணவிகளை மீட்டனர். மலைப்பாம்பை மாணவிகள் முதலிலே பார்த்து இருந்தால் அதிர்ச்சியில் பிடியை விட்டு வெள்ளத்தில் சிக்கியிருப்பார்கள்.
பெருக்கெடுத்த வெள்ளம்
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாவட்டத்தில் அதிகபட்சமாக சேர்வலாறு அணை பகுதியில் 205 மி.மீ மழை பதிவாகி உள்ளது. பாபநாசம் அணையில் 157 மி.மீ. மழையும், மணிமுத்தாறு அணையில் 60.4 மி.மீ .மழையும் பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது.
மணிமுத்தாறு அணை திறப்பு
ஏற்கனவே பாபநாசம் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மற்றும் கடனா அணை, ராமநதி அணை தண்ணீர், கால்வாய்களில் வரும் தண்ணீர் ஆகியவற்றால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் மணிமுத்தாறு அணையில் இருந்து இன்று பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக தாமிரபரணியில் மீண்டும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
குறுக்குத்துறை முருகன்
மழை காரணமாக நெல்லை தாமிரபரணி ஆற்றில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலை மூழ்கடித்து வெள்ளம் சென்றது. ஆற்றுக்குள் உள்ள பல்வேறு மண்டபங்களும் வெள்ளத்தில் மூழ்கின.
குற்றாலத்தில் வெள்ளம்
இதேபோல குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையினால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளிலும் அதிக அளவு தண்ணீர் கொட்டியதால் சுற்றலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளனர்.
நீங்கிய தண்ணீர் பிரச்சினை
தொடர் மழையின் காரணமாக நேற்று முதலே தென் மாவட்டம் குளுமையாக உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும்,குடிநீர் ,விவசாயத்திற்குத் தேவையான நீர் பற்றாக் குறை நீங்கியுள்ளது என்பதால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.