கிடுகிடுவென குறையும் பாபநாசம் அணை நீர் மட்டம்.. குடிநீர் தட்டுப்பாடு வருமா... நெல்லை மக்கள் அச்சம்
நெல்லை: பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் நெல்லை, தூத்துக்குடியில் குடிநீர் தட்டுபாடு அபாயம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு பாபநாசம் அணையைதான் மக்கள் பெரிதும் நம்பியுள்ளனர். இந்த அணையின் மூலம் வடகிழக்கு பருவமழை காலத்தில் பிசான நெல் சாகுபடியும், தென் மேற்கு பருவமழை காலத்தில் கார் பருவ சாகுபடியும் நடக்கும்.
வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் நெல்லையில் அதிக அளவில் தண்ணீர் கிடைக்கிறது. கடந்த வடகிழக்கு பருவமழையின் போது மழை நன்றாக பெய்ததால் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணைகள் நிரம்பி வழிந்தன.
ஜூன் மாதம் தென் மேற்கு பருவமழையும் பெய்யும். இதன் மூலம் கார் பருவ சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். இந்த முறை கார் சாகுபடிக்கு ஜூன் மாதம் 1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், தென் மேற்கு பருவமழை சரியான அளவில் பெய்யாமல் ஏமாற்றி வி்ட்டதால் கார் பருவ சாகுபடி இல்லாமல் பயிர்கள் கருகி விட்டன.
இதனால் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 28.20 அடியாக குறைந்து விட்டது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 36 டவுண் பஞ்சாயத்துகள், 425 கிராம பஞ்சாயத்துகள், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, 2 நகராட்சிகள், 19 டவுண் பஞ்சாய்ததுகள், 408 கிராம பஞ்சாயத்துகள் அனைத்திற்கும் பாபநாசம் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீர் மூலமே குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் தாமிரபரணி தணாணீர் செல்கிறது.
இதற்காக ஆயிரக்கணக்கான குடிநீர் உறை கிணறுகள் தாமிரபரணி ஆற்றில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பாபநாசம் அணையில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் இன்னும் 10 நாட்களுக்கு அணையில் தண்ணீர் திறக்கப்படுமா என சந்தேகமாக உள்ளது. இதனால் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.