மழை இல்லை... வேகமாக இறங்குகிறது பாபநாசம் அணை நீர்மட்டம்
போதிய மழை இல்லாமல், வறட்சி தாண்டவமாடும் நிலையில் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைய தொடங்கியுள்ளது.
நெல்லை: மலைப் பகுதியில் போதிய மழை இல்லததால் பாபநாசம் அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைய தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் அமைந்துள்ளன. இந்த அணைகள் வடகிழக்கு பருவமழை காலத்தில் பெரும்பாலும் நிரம்பி விடும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஏமாற்றம் அளித்ததால் கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக இரண்டு அணைகளும் போதிய தண்ணீர் இல்லாமல் உள்ளது.
இதனால் பாபநாசம் அணையில் இருந்து பிசான பருவ நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. அக்னி வெயில் தொடங்குவதற்கு முன்பே நெல்லையில் வெயில் வெறுத்தெடுத்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பின்னர் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையால் மணிமுத்தாறு அணை குடிநீர் தேவையை கருதி கடந்த சில நாட்களுக்கு முன்பு மூடப்பட்டது. தற்போத பாபநாசம் அணையின் நீர்மட்டம் 25.10 அடியாக உள்ளது.
சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 40.73 அடியாக உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தினமும் 250 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது அது 200 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.