ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 58 அடியாக உயர்வு
மேட்டூர்: காவிரியில் அதிக அளவு நீர்வரத்தின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்து 58 அடியாக உள்ளது.
தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கபினி அணை நிரம்பியது. இதே போல் கிருஷ்ண ராஜசாகர், ஹாரங்கி, ஹேமாவதி அணைகளும் நிரம்பி வருகிறது.
அந்த தண்ணீர் கடந்த 17ஆம் தேதி மதியம் முதல் வரத்தொடங்கியது. இதையடுத்து ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. மேலும் அருவிகளில் பொதுமக்கள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே தற்போது கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தற்போது வினாடிக்கு 49 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் நேற்று இரவு முதல் ஒகேனக்கல்லுக்கு வரத்தொடங்கியது.
இன்று காலை அது மேலும் அதிகரித்தது. சினி பால்சுக்கு செல்லும் மெயின் வழியை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. நேரம் செல்ல செல்ல தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்கும்.
கடந்த வாரம் வந்த தண்ணீரை விட மேலும் அதிகளவில் தண்ணீர் வரக் கூடும் என்பதால் கரையோர மக்களை வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் யாரும் ஆர்வமிகுதியில் கரைபுரண்டு ஓடும் காவிரியில் இறங்க வேண்டாம் என்றும் தொடர்ந்து வெள்ள எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. நீர்வரத்தின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் 47 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டமும் மளமளவென உயர்ந்து வந்தது.
தற்போது அணையின் நீர்மட்டம் 58 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 15 ஆயிரத்து 545 கனஅடி தண்ணீரும் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்தின் காரணமாக அணையின் வெளியே தெரிந்த நந்தி சிலை, இரட்டை கோபுரங்கள், ஜலகண்டேஸ்வரர் கோவில் ஆகியவை தற்போது தண்ணீரில் மூழ்கத்தொடங்கியுள்ளன.