உங்களுக்கெல்லாம் தண்ணீர் கிடையாது.. பெப்சி, கோக் உள்பட 8 நிறுவனங்களுக்கு அதிரடி தடை!
சென்னை: நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுவதால் தாமிரபரணி தண்ணீரைப் பயன்படுத்தி வரும் 8 தொழில் நிறுவனங்களுக்கு மே 1ம் தேதி முதல் தற்காலிகமாக தண்ணீர் நிறுத்தப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் மு.கருணாகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 தொழிற்சாலைகளின் தொழிற் தேவைகளுக்கு தண்ணீர் வழங்குவது மே-1 முதல் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
தண்ணீர் சப்ளை நிறுத்தப்படும் நிறுவனங்கள்:
மதுரா கோட்ஸ்
சன்பேப்பர் மில்ஸ்
சர்வலட்சுமி பேப்பர் மில்
சேஷாயி பேப்பர் மில்
அர்ஜீனா பேப்பர் மில்
சிப்காட்டில் செயல்படும் பெப்சி,கோக் உள்ளிட்ட நிறுவனங்கள்
இந்தியா சிமெண்ட்ஸ்
நெல்லை மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுவதால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாகக் குறைந்து விட்டது. இதையடுத்து, கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டுவரும் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களான கோக், பெப்சி ஆகியவை ஏப்ரல் 30-ம் தேதி வரை தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே தடை விதித்திருந்தது.
இந்த நிலையில், இந்த நிறுவனங்கள் தவிர மேலும் 6 நிறுவனங்களுக்கும் தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் மே 1-ம் தேதி முதல் தண்ணீர் வழங்க தற்காலிகத் தடை விதித்துஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டு உள்ளார்.