குளத்தில் விஷத்தை கொட்டி மீன்களை கொன்ற 3 பேர் கைது
செங்கோட்டை: செங்கோட்டை அருகே மீன் குளம் குத்தகைக்கு எடுக்கும் போட்டியில் குளத்து நீரில் விஷம் கலந்து மீன்களை கொன்ற 3பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டளைக் குடியிருப்பு அருகே உள்ள கற்குடி கிராமத்தில் அனந்தராமன் திருத்து குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் அப்பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
நேற்று இந்த குளத்தின் குத்தகை ஏலம் செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் கற்குடி இந்திராகாலனியை சேர்ந்த அரிகரன் (28) என்பவர் இந்த குளத்தை ரூபாய்-35 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை அரிகரன் குளத்தில் மீன் குஞ்சுகளை விடுவதற்கு போதுமான தண்ணீர் இருக்கிறதா என பார்வையிட சென்றுள்ளார். அங்கு ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து புளியரை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது குளத்து கரையோரம் விஷப்பாட்டில் கிடந்தது.
இதனால் குளத்து தண்ணீரில் விஷம் கலந்துள்ளதும் அதன் காரணமாக மீன்கள் செத்து மிதந்ததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் உடனடியாக தண்ணீர் மற்றும் மீன்களை எடுத்து ஆய்வுக்கும்,நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
மேலும் அரிகரன், அந்த பகுதியை சேர்ந்த காளி , உதயகுமார், மாரித்துரை ஆகியோர் தான் காரணம் என்றும் புகார் செய்தார் .அரிகரன் ஏலம் எடுத்த குளத்தை ஏற்கனவே காளி குத்தகைக்கு எடுத்து மீன்களை பிடித்து வந்துள்ளார். நேற்று நடந்த ஏலத்தில் காளி குறைந்த விலைக்கு ஏலம் கேட்டதாக கூறப்படுகிறது. அரிகரன் அதிக ரூபாய்க்கு ஏலம் கேட்டு குத்தகைக்கு எடுத்தார்.
இதன் காரணமாக அவர்களுக்குள் நேற்று பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அனந்தராமன் திருத்து குளத்தில் விஷம் கலந்திருப்பதால் அதில் உள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். சம்பவத்தில் தொடர்புடைய கற்குடியை சார்ந்த காளி, உதயகுமார், மாரிதுரை.ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.