காரைக்குடி பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் விழா
சிவகங்கை மாவட்ட பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கடந்த 29-ஆம் தேதி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பில் குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சுப்பையா தலைமை வகித்தார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் மாரிமுத்து முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியர் பீட்டர் ராஜா வரவேற்றார். விழாவில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பையா பள்ளிக்கு தேவையான இருக்கை வசதி, மாணவர்கள் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவதற்கு ஏதுவாக கணிப்பொறிகள், மாணவர்கள் பாடங்களை ஆர்வத்துடனும், எளிதில் புரியும் வண்ணம் படிப்பதற்கு ஏதுவாக பிரொஜக்டர்கள் போன்ற வசதிகளை செய்து தருவதாக உறுதியளித்தார்.
இவ்விழாவில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சகாய அமலன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர்அழகு சுந்தரி, பள்ளி வளர்ச்சி மற்றும் மேலாண்மைக் குழுத் தலைவர் சகாய செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர்கோமதிஜெயம் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி தலைமையாசிரியர் முத்துவேல்ராஜன் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சரவணன் ஆகியோர் செய்திருந்தார்கள். இந்நிகழ்ச்சியை உதவி தலைமையாசிரியை விஜயலெட்சுமி தொகுத்து வழங்கினார்கள்.