கர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு அடியோடு குறைப்பு!
Recommended Video
மேட்டூர்: தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவிலிருந்து திறக்கப்பட்ட காவிரி நீர் தமிழகத்திற்குள் வந்து விட்டதால் இந்த நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதேசமயம் தற்போது கபிணி அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதை கர்நாடக அரசு குறைத்து விட்டது.
கர்நாடகாவிலும், கேரளாவிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்ததால் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளுக்கு பெருமளவில் நீர்வரத்து இருந்தது. இதையடுத்து அந்த மாநில அரசு அணைகளுக்கு ஆபத்து வந்து விடாமல் இருப்பதற்காக கபிணி அணையிலிருந்து விநாடிக்கு 30,000 கன அடி நீர் அளவுக்கு திறந்து விட்டது.
இந்த அணை தமிழகத்திற்குள் நுழைந்து விட்டது. தற்போது மேட்டூர் அணையையும் எட்டத் தொடங்கி விட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்தது. அணைக்கு விநாடிக்கு 32,000 கன அடி நீர் வரை வந்து கொண்டிருந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 45 அடி என்ற அளவில் இருந்தது. குடிநீருக்காக அணையிலிருந்து 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஓகேனக்கலுக்கு நீரின் அளவு வெகுவாக குறைந்து விட்டது. மீண்டும் கர்நாடகத்தில் மழை வலுத்தால்தான் மேட்டூருக்கு வரும் நீரின் அளவும் அதிகரிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.