மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு மளமள உயர்வு.. தஞ்சை மாவட்டம் வரை வெள்ள எச்சரிக்கை
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர்: மேட்டூர் அணையிலிருது இரவு 8 மணிக்கு 65 ஆயிரம் கண அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் இரவு 9 மணிக்கு 75 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாலும் காவிரிக் கரையோர மக்களுக்கு மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையிலிருந்து தொடர்ந்து நீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட 20 ஆயிரம் கன அடி நீர் பின்னர் 40 ஆயிரம் கன அடியாகவும் பின்னர், இன்று இரவு 8 மணிக்கு வினாடிக்கு, 65 ஆயிரம் கன அடியாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு 9 மணிக்கு நீர் திறப்பு 75 ஆயிரம் கன அடியாகவும், 10 மணிக்கு 80,000 கன அடியாகவும் அதிகரிக்க உள்ளதாக மேட்டூர் அணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மேட்டூர் அணையிலிருந்து 75 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டால், காவிரிக் கரையோரப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். அதனால், காவிரிக்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் ராஜாமணி காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். பொதுமக்கள் கூடும் இடங்களான சோமரசம்பேட்டை, முக்கொம்பு, அம்மாமண்டபம், கல்லனை ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்காதபடி பாதுகாப்பு நடவடிக்க்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அதே போல, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் யாரும் ஆற்றில் இறங்கி குளிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.