ஊருதான் "குளுகுளு".. குடிக்கத் தண்ணீர் இல்லை.. குன்னூரில் ஒரு குடம் தண்ணீர் ரூ.15!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வரலாறு காணாத வறட்சி காரணமாக ஒரு குடம் தண்ணீர் ரூ.15 வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது ரேலியா அணை. இந்த அணையின் மூலம் தான் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடும் வெயிலின் தாக்கம் காரணமாக 46 புள்ளி 3 அடி உயரமுள்ள ரேலியா அணையில், தற்போது ஒன்றரை அடி அளவு மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
இந்நிலையில், தற்போது கோடை காலம் என்பதாலும் குன்னூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. நகராட்சி மூலம் தண்ணீர் விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். பொதுமக்கள் தங்கள் தேவைக்காக ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போது கோடை சீசன் காரணமாக குன்னூர் வரும் சுற்றுலா பயணிகளும் தங்களது குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.