சென்னையில் கொளுத்தும் வெயில்... . கோயம்பேட்டில் குவிந்த தர்பூசணி பழங்கள்
சென்னை: சென்னையில் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டில் உடலுக்கு குளிர்ச்சி தரும் தர்பூசணி பழங்கள் குவியத்தொடங்கியுள்ளன.
கோடை வரும் பின்னே... தர்பூசணி வரும் முன்னே என்பார்கள். கோடையின் வெப்பத்தை சமாளிக்க பெரும்பாலான மக்கள் தர்பூசணி பழங்களையே நம்பி உள்ளனர்.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை கடுமையாக பெய்து நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. பிப்ரவரி மாதம் இறுதிவரை பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 15ம் தேதியே வெயிலின் தாக்கம் அதிகரித்து விட்டது.
சென்னை சாலைகளில் கானல்நீர் ஓடத் தொடங்கிவிட்டது. அனல்காற்று வீசுவதால் வீட்டிற்குள் புழுக்கம் அதிகரித்து விட்டது. இன்னும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
கொளுத்தும் வெயில்
சென்னையில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க மக்கள் பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். வெப்பத்தை தணிக்கக் கூடிய தர்பூசணி, நுங்கு, வெள்ளரிக்காய், மோர், முலாம்பழம், எலுமிச்சை பழச்சாறு, நன்னாரி சர்பத் வகைகளின் விற்பனை இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தர்பூசணி விற்பனை
கோடை வெயிலை தணிக்க உதவும் பழங்களில் தர்பூசணி 92 சதவீத நீர்ச்சத்துள்ள பழமாகும். மேலும் கோடைக் காலங்களில் அதிக அளவில் விளையக்கூடியதும், விலை குறைந்ததும், உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் நிறைந்த பழமும் ஆகும். இந்த ஆண்டு நீர் நிலைகள் நிரம்பியுள்ளதால் தர்பூசணி பழங்களின் விளைச்சலும் அதிகரித்துள்ளது.
குவிந்த பழங்கள்
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டில் விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், கடலூர் ஆகிய பகுதியில் இருந்தும், ஆந்திராவில் நெல்லூர், கடப்பா ஆகிய இடங்களில் இருந்தும் தற்போது நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 லாரிகளில் தர்பூசணி வந்து கொண்டு இருக்கிறது.
சூடு பிடித்த விற்பனை
தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக தர்பூசணி விற்பனை சூடு பிடித்துள்ளது.அதனால் 10 முதல் 15 லாரிகள் வரை தர்பூசணி வருகிறது. மேலும் கோடை வெயில் ஆரம்பிக்கும் காலங்களில் இதே பகுதியில் இருந்து தினமும் 40 முதல் 50 லாரிகள் வரை தர்பூசணி வரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறு வியாபாரிகள்
தற்போது தர்பூசணி 1 கிலோவுக்கு ரூ.8 முதல் 15 வரை விற்கப்படுகிறது. சீசன் நேரங்களில் 1 கிலோ ரூ.5க்கு விற்கப்படும். மணலி, எண்ணூர், அடையாறு, திருவான்மியூரில் உள்ள வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து தர்பூசணியை வாங்கி செல்கிறார்கள். இதனால் தர்பூசணி விலை அதிகம் காணப்படுகிறது.
அறுவடை செய்யப்படும் பழங்கள்
வழக்கமாக பிப்ரவரி கடைசி வாரத்தில் அறுவடை தொடங்கி ஏப்ரல் முதல் வாரத்தில் தர்பூசணி விற்பனைக்கு வரும். ஆனால், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அதிக அளவு பெய்த காரணத்தினால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உரிய நேரத்தில் நிலத்தை தயார் செய்து தர்பூசணி விதை நடவு செய்ய தாமதமானது. இதனால், இந்த ஆண்டு தர்பூசணி பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது. எனவே மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கு முன்னதாகவே தர்பூசணி வரத்து முற்றிலும் நின்றுவிடும் என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.