வழக்கு முடிவு எதிராக வந்தாலும், இடைத்தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயார்: தங்க தமிழ்ச்செல்வன்
வழக்கு முடிவு எதிராக வந்தாலும், இடைத்தேர்தலைச் சந்திக்க 100% நாங்கள் தயார் என்று தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : 18 எம் எல் ஏ.,க்கள் வழக்கில் எங்களுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால், நாங்கள் இடைத்தேர்தலைச் சந்திக்க 100% தயாராக உள்ளோம் என்று டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
18 எம் எல் ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று மதியம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு தமிழகத்தின் ஆட்சி நிலைக்குமா என்று தீர்மானிக்கும் காரணியாக இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், டிடிவி தினகரன் ஆதரவு எம் எல் ஏ.,க்கள் சென்னையில் உள்ள அவரது வீட்டில் குவிந்துள்ளனர். இதுகுறித்து தினகரன் ஆதரவு அணியைச் சேர்ந்த தங்க தமிழ்ச்செல்வன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசுகையில், தீர்ப்பு எங்களுக்கு சாதகமாகவே வர வேண்டும். உண்மையில் கட்சி கொறடா உத்தரவை மீறியது ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம் எல் ஏ.,க்கள் தான்.
கட்சி தாவல் தடை சட்டம் எங்கள் மீது நிச்சயம் பாயாது. தீர்ப்பு எங்களுக்கு எதிராக வந்தாலும் இடைத்தேர்தலைச் சந்திக்க 100% தயாராக உள்ளோம். தீர்ப்பு சாதகமாக வராவிட்டால், மேல்முறையீடு செய்யமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.