வாக்காளர்களுக்கு லஞ்சம் தரும் தினகரனை தகுதி நீக்கம் செய்யுங்க.. ஓபிஎஸ் ஆவேசம்
சென்னை: ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அவரை இன்று சந்தித்தார். அப்போது பன்னீர்செல்வமும், ஜி.கே.வாசனும் கூட்டாக பேட்டியளித்தனர்.
ஓ.பி.எஸ் கூறுகையில், தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேநேரம், தேர்தல் நியாயமாகவும் இருக்க வேண்டும்.
தர்ம யுத்தத்தின் நியாயத்தை எடுத்துக்கூறி மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறோம். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினகரன் தரப்புதான் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக்கொண்டுள்ளார்கள். ஒழுக்க கட்டுப்பாட்டை மீறி செயல்படும் வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்ட விதிகள்படி, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வழி இருந்தால் அதை செய்ய வேண்டும். தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.