''நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல, பலமாகவே இருக்கோம்''... தனக்கு தானே தைரியம் சொல்லும் தமிழிசை
சென்னை: கூட்டணிக்கு அவர் வருவாரா?.... இவர் வருவாரா? என்று காத்திருந்த பாஜக, யாருமே வராத காரணத்தால் விருப்ப மனுவாவது வாங்கி மாஸ் காட்டுவோம் என்று இன்று முதல் மனு வாங்க தொடங்கியுள்ளது. இன்றும் நாளையும் இரண்டு தினங்கள் மட்டுமே மனு வாங்குவோம் கொடுக்கிறவங்க கொடுக்கலாம் முந்திக்கிறவங்களுக்கே சீட் என்று மாநில தலைவர் தமிழிசை அறிவித்துள்ளார்.
நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல... பலத்தோடுதான் இருக்கிறோம்.. பலத்தோடு பலம் சேரவேண்டும் என்றுதான் கூட்டணிக்கு பல கட்சிகளை அழைக்கிறோம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு இன்று கட்சி அலுவலகமான கமலாலயத்தில் பெறப்படுகிறது. இதில் தமிழக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நாளைவரை விருப்ப மனு விநியோகம் நடைபெறும் எனவும், வரும் 13, 14ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கமலாலயத்தில், சட்டசபை தேர்தல் விருப்ப மனு விநியோகத்தை துவக்கி வைத்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், நிச்சயமாக 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.கவின் தாக்கம் இருக்கும், தமிழகத்தில் நேர்மையான அரசியலை பாஜக நிலைநிறுத்த முயற்சிக்கும். ஆட்சிக்கு வந்தால் ஊழல்,மதுவை ஒழிப்போம் என்றார்.
கூட்டணி வைத்து போட்டியிட்டுதான் ஜெயிக்க வேண்டும் என்கிற அளவிற்கு நாங்கள் பலவீனமானவர்கள் அல்ல. நாங்கள் பலமாகவே இருக்கிறோம். பலத்தோடு பலம் சேர்ந்தால் மேலும் பலமாகும் என்பதற்காகவே பிற கட்சியினரை கூட்டணிக்கு அழைக்கிறோம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
இதை கேட்ட போது 'பில்டிங் ஸ்டிராங்க்... ஆனா பேஸ்மெண்ட் வீக்' என்று வடிவேலு சொன்னதுதான் நினைவுக்கு வந்து போனது...