ஐஏஎஸ் பதவியை துறந்து மக்கள் பணிக்கு வந்தவர்.. 'அறம்' மதிவதனிக்கு ரோல் மாடல் சிவகாமி!
சென்னை: பெரிதும் வரவேற்பை பெற்றுள்ள அறம் படத்து கலெக்டர் நயன்தாரா கதாப்பாத்திரத்தை போலவே நிஜத்திலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் பணியாற்ற களம் புகுந்தது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், அல்லது மறந்திருக்கலாம், அல்லது தெரியாமலும் இருக்கலாம்.
அறம் திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கதாநாயகி நயன்தாரா இதில் மாவட்ட கலெக்டராக நடித்துள்ளார்.
நயன்தாராவின் கதாப்பாத்திர பெயர் மதிவதனி. மக்களுக்காக உழைக்கும் கதாப்பாத்திரம்.
உண்மையில் நடந்த கதை
ஆனால் 'அறம்' படத்தின் இறுதியில், மக்களுக்கான சேவைகளுக்கும், செயல்பாடுகளுக்கும் தடையாக இருக்கும், தனது ஐஏஎஸ் அதிகாரி பதவியை தூக்கிப்போட்டுவிட்டு, தேவையான அதிகாரத்தைப் பெற அரசியலில் நுழையும் மதிவதனி கதாப்பாத்திரம். நிஜ வாழ்க்கையில், இதேபோலத்தான் அரசியலில் ஈடுபட தனது ஐஏஎஸ் பணியை துறந்தவர் சிவகாமி. 2008ம் ஆண்டு இந்த அதிசயம் நடந்தது. ஒடுக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அளிக்க ஐஏஎஸ் பதவியை உதறி தள்ளியவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்.
ஜாதி பிரச்சினை
1980ம் ஆண்டு பேட்ஜை சேர்ந்த இவர், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உட்பட, உயர்ந்த பல பொறுப்புகளை வகித்தவர். அரசு பணிகளிலும் ஜாதி ரீதியான பிரச்சினைகளை இவர் சந்தித்தார். இதை தனது நாவல்கள் மூலம் வெளிப்படுத்தினார்.
நாவல்கள், குறும்படம்
1986ல் இவரது முதல் நாவலான 'பழையன கழிதலும்' வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 1990இல் 'ஊடாக' என்ற குறும்படத்தை இயக்கினார். இதன்பிறகு, 2003ல் இருந்து 'தலித் நிலஉரிமை இயக்கத்தில்' தீவிரமாக செயலாற்றினார்.
தோல்வியே பரிசு
2008ல் விருப்ப ஓய்வு பெற்ற சிவகாமி, பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2009ல் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் மக்கள் தோல்வியை பரிசளித்தனர். 2009ல் 'சமூக சமத்துவ படை' என்ற கட்சியை துவங்கினார்.
தலித் பிரச்சினை
தொடர்ந்து தலித்துகள் பிரச்சினைக்காக குரல் கொடுத்து வருகிறார். தருமபுரியில் தலித் மக்கள் குடிசை எரிப்பு, தலித் சமூகத்தை சேர்ந்த டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை உட்பட பல பிரச்சனைகளிலும் அதிரடியாக வாய்ஸ் கொடுத்தவர் சிவகாமி. இவரின் தந்தை பழனிமுத்து முன்னாள் எம்எல்ஏ என்பது குறிப்பிடத்தக்கது.