மாற்றுத்திறனாளிகளின் நலனில் அதிக அக்கறை கொண்ட மாநிலம் தமிழகம் - அமைச்சர் சரோஜா
மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தில் 3% ஆக இருந்த இடஒதுக்கீடு 4% ஆக அதிகரித்துள்ளது என்று அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.
சென்னை: தற்போது அமல்படுத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தில் 3% ஆக இருந்த இடஒதுக்கீடு 4% ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டத்தை கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா கூறியுள்ளார்.
சென்னையில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடைபெறுகிறது. இது பங்கேற்க வந்த சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக ரூ.466 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 11,89,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் எந்தவிதமான தங்கு தடையின்றி நடந்து வருவதற்கு எந்த வகையில் பாதிப்பு அடைந்திருக்கிறார்களோ, அந்த வகையில் எந்த உதவி தேவையோ அதை கண்டறிந்து அவர்களுக்கு தகுந்தார்போல் அனைத்து உபகரணங்களையும் நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
முக்கியமாக தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, 2 கால்களும் செயல் இழந்தவர்களுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மூளை பாதிப்பு அடைந்தவர்களுக்கும், சதை பாதிப்பு அடைந்தவர்களுக்கும் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மாநில அரசுகளின் பங்காக அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாத மாதம் ரூ.1000 உதவித் தொகை கிடைக்கிறது. இதுமட்டுமல்லாமல் மூளை பாதிப்பு, சதை பாதிப்பு அடைந்த குழந்தைகளுக்கு அம்மாவின் அரசு ரூ.1500 கொடுக்க வேண்டும் என்பதால் அதற்கு மட்டும் ரூ.238.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார்கள். இந்த திட்டம் மற்ற மாநிலங்களில் இல்லை, தமிழ்நாட்டில் மட்டும் தான் உள்ளது என்பதை பெருமையுடன் கூற கடமைப்பட்டிருக்கிறேன்.
அம்மா அவர்கள் 16.6.2015 அன்று மொபைல் தெரப்பி யூனிட் என்று 32 வாகனங்களில், மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே சென்று மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான பயிற்சி கொடுப்பதோடு, பெற்றோர்களுக்கும் பயிற்சி கொடுத்து அவர்களை எப்படி ஆரம்ப காலத்திலேயே நல்வழிப்படுத்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்காக 32 மாவட்டங்களிலும் அந்த வண்டியை கொடுத்து 32 மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.
இன்று ஏறத்தால 15,000 குழந்தைகளை கண்டறிந்து ஆரம்ப நிலையிலேயே நோயை கண்டறிந்து நல்வழிப்படுவடுத்தும் நடைமுறையில் ஈடுபட்டுள்ளோம். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்க உத்தியோகத்தில் 3% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது கட்டாயம்.
இதில் ஏ மற்றும் பி பிரிவில் 238 போஸ்டுகளுக்கு தகுதியான மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து பணியமர்த்தி வருகிறோம். மேலும் சி மற்றும் டி பிரிவில் 1,978 போஸ்டுகளுக்கு தகுதியானவர்களை கண்டறிந்து பணியமர்த்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது.
தற்போது அமல்படுத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய சட்டத்தில் 3% ஆக இருந்த இடஒதுக்கீடு 4% ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு சட்டத்தை கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்தி இருக்கிறோம் என்றார்.
அமைச்சர் சரோஜா மீது லஞ்சப்புகார் எழுந்துள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஒருவித பதற்றத்துடனேயே பங்கேற்றார் அமைச்சர் சரோஜா.