சேகர் ரெட்டி விவகாரத்தில் வழக்கு போட்டால் சந்திக்க தயார் : ஓபிஎஸ்
சேகர் ரெட்டி விவகாரத்தில் வழக்கு போட்டால் சந்திக்க தயாராக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சிவகாசி: சேகர் ரெட்டி விவகாரத்தில் வழக்கு போட்டால் அதனை சந்திக்க தாம் தயாராக இருப்பதாக முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லில் புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஓபிஎஸ், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு நீதி விசாரணை வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் அதற்காக எங்களின் தர்மயுத்தம் தொடரும் என்றார்.
சேகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தான கமிட்டிஉறுப்பினராக இருந்ததால் அவருடன் புகைப்படம் எடுத்தேன் . அவருடன் புகைப்படம் எடுத்தது தவறா? என்று கேட்டார்.
எடப்பாடி பழனிசாமி அரசு திமுக உடன் கை கோர்த்து கொண்டு மக்கள் பிரச்னையை பற்றி பேசுவது இல்லை என்று குற்றம் சாட்டிய ஓபிஎஸ், அரசியலை விமர்சிக்க நடிகர் கமலுக்கு உரிமை உண்டு என்றார்.
டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக அரசைக் கண்டித்து வரும் 10ஆம் தேதி சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
சேகர் ரெட்டியோடு கூட்டணி வைத்துக்கொண்டு ஊழல் செய்தவர் ஓ.பன்னீர் செல்வம் என்று குற்றம் சாட்டியிருந்தார் அமைச்சர் சி.வி. சண்முகம். இதற்கு பதில் தரும் விதமாக சிவகாசி பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.