விஜயகாந்த் அழைத்தால் பேசத் தயாராக இருக்கிறோம்.. முத்தரசன்
மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திக்க விருப்பம் தெரிவித்து அழைத்தால், நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
மதுரை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டசபைத் தேர்தல் வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.
மக்கள் நலக் கூட்டணியானது மக்கள் நல பிரச்சினையை முன் வைத்து தொடங்கப்பட்டு இருக்கிறது. மக்கள் பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களை எங்கள் கூட்டணி நடத்தி வருகிறது.
குறைந்தபட்ச செயல் திட்டங்களை வெளியிட்டு விட்டு தேர்தலை சந்திக்க உள்ளோம். இந்த கூட்டணியில் அதிமுக, திமுக, பாமகவை சேர்க்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளோம். தேமுதிக, தமாகா எங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று இரு கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறோம்.
இதற்கு முன்பு கட்சிகள் கூட்டணி அமைக்கும் போது தொகுதி உடன்பாடு அடிப்படையில் சேருவார்கள். ஆனால் நாங்கள் கொள்கைகளை முன் வைத்து மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு வித்தியாசமான கூட்டணி ஆகும். மக்கள் நலக்கூட்டணியில் தலைவர்கள் கிடையாது. அனைவருமே ஒருங்கிணைப்பாளர்கள் தான். தேர்தல் கூட்டணிக்கு தேமுதிக அழைப்பு விடுத்தால் நாங்கள் பேசுவோம்.
உடுமலைப்பேட்டையில் காதல் திருமணம் செய்தவர் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஜாதி மறுப்பு திருமணம் செய்ததால் இந்த படுகொலை நடந்துள்ளது. இது வன்மையாக கண்டித்தக்கது. இதேபோல் பல கொலைகள் தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. காரணம் அ.தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதால் இப்படிப்பட்ட படுகொலைகள் நடந்து வருகின்றன. இதை தடுக்க வில்லை என்றால் சமூக பதற்றம் ஏற்படும் நிலை உருவாகும்.
இந்தியா ஒரு விவசாய நாடாகும். தமிழகத்தில் விவசாயி பாலன் என்பவர் தனியார் நிறுவனம் மூலம் டிராக்டரை கடனுக்கு வாங்கி இருக்கிறார். 2 தவணை மட்டும் கட்டாததால் விவசாயி பாலன் தாக்கப்பட்டு இருக்கிறார். அவரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். இதேபோல் விவசாயி அழகர் என்பவரும் தாக்கப்பட்டார். இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்தார். இதை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் முத்தரசன்.