ஆட்சிக்கு பிரச்சினை இல்லை.. அடித்து சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்
Recommended Video
சென்னை : தினகரன் தரப்பு தொடர்ந்து தூங்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால், நாங்கள் விழிப்புடன் உள்ளோம் என்றும், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அணி மாறியது குறித்து தனக்குத் தெரியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு இன்று டி.டி.வி தினகரனை நேரில் சந்தித்து தனது ஆதரவை வழங்கினார். மேலும், மக்களின் ஆதரவு தினகரனுக்கு மட்டுமே இருப்பதாகவும், தொகுதி மக்களுக்கு உதவ பலர் முட்டுக்கட்டை போடுவதாலேயே தினகரனைச் சந்தித்து ஆதரவு வழங்கியதாவும் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதலளித்த ஜெயக்குமார், எம்.எல்.ஏ பிரபு அணி மாறியது குறித்து தனக்குத் தகவல் தெரியாது என்றும், இதுகுறித்து விசாரித்து பதிலளிப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தினகரன் அணியின் ஸ்லீப்பர் செல்கள் குறித்த கேள்விக்கு, ஸ்லீப்பர் செல்கள் இல்லை, தினகரன் அணி தான் ஸ்லீப்பர்ஸ்; நாங்கள் அவேர்னஸ்(விழிப்பு உணர்வு) கொண்டு உள்ளோம் என்றும் , தினகரன் அணி தூங்கிக்கொண்டிருக்கிறது அவர்களைப் பற்றி பேசுவதற்கு எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தங்கள் அணி பெரும்பான்மை கொண்டு பலமாக இருப்பதாகவும், 2021ல் கூட அதிமுக ஆட்சி அமைக்கும், அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.