அதிமுக அரசின் அவலங்களை சொல்லி பிரசாரம் செய்வோம்: சரத்குமார் பேட்டி
சென்னை: வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசின் அவலங்களை மக்களிடம் எடுத்து கூறி பிரச்சாரம் செய்வோம் என சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது சமத்துவ மக்கள் கட்சி. ஆனால், அதிமுக தங்களை வளரவிடவில்லை, கறிவேப்பிலையாக பயன்படுத்தியது என்ற பரபரப்புக் குற்றச்சாட்டுடன், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான சரத்குமார்.
அதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணியில் சேர சரத்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கு சரத்குமாரும் கொள்கை அளவில் பாஜகவை ஏற்றுக்கொண்டேன். மற்ற விவரங்கள் விரைவில் பேசி முடிவு செய்வோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை தி.நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கடந்த 3 நாட்களாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் நேர்காணல் நடத்தி வருகிறார்.
நேர்காணலுக்கு இடையே செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் கூறுகையில், சமக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறேன். கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவெடுக்க உள்ளேன். சமகவின் தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது.
விரைவில் எங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். திமுக, அதிமுகவுக்கு ஒரு மாற்று தேவை என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். அதிமுக அரசின் அவலங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்வோம் என சரத்குமார் கூறினார்.