அரசின் வாய்மொழி உறுதியை நம்ப முடியாது.. முழுவதுமாக மூட்டை கட்டி வையுங்கள்.. நெடுவாசல் மக்கள்
ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் அரசு அளிக்கும் வாய்மொழி உறுதியை ஏற்க முடியாது என நெடுவாசல் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை: அரசு அளிக்கும் வாய்மொழி உறுதியை நம்ப முடியாது என நெடுவாசல் மக்கள் தெரிவித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டம் முழுவதுமாக மூட்டைக்கட்டி வைக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் மக்கள் 14வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மட்டுமின்றி தஞ்சை உள்ளிட்ட பல இடங்களிலும் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுவது, மனித சங்கிலி போராட்டம் நடத்துவது என பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இத்திட்டத்தை ரத்துசெய்யக்கோரி போராட்டக்குழுவினர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தனர். அப்போது விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என முதல்வர் உறுதியளித்ததாக அவர்கள் கூறினர்.
இந்நிலையில் முதல்வரின் வாய் மொழி உறுதியை நம்முடியாது என்று நெடுவாசல் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முழுவதுமாக மூட்டை கட்டி வைக்கும் வரை போராட்டத்தை கைவிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.