மழை எவ்வளவு பெய்யும் என்பதை துல்லியமாக கணிக்க வசதி இல்லை... வானிலை மைய தலைமை இயக்குநர்
சென்னை: மழை எந்த அளவுக்குப் பெய்யும் என்பதை துல்லியமாக கணித்துக் கூற இதுவரை உலகில் எந்த இடத்திலும் தொழில்நுட்ப வசதி இல்லை என்று சென்னை வானிலை மைய தலைமை இயக்குநர் பாகுலேயன் தம்பி கூறியுள்ளார்.
மேலும் இந்த வட கிழக்குப் பருவ மழைக் காலத்தில் இயல்பை விட அதிக மழை பெய்ய 90 சதவீத வாய்ப்புகள் உள்ளன என்றுதான் தங்களது மையம் கூறியிருந்ததாகவும், ஆனால் அதை ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டு 90 சதவீத அதிக மழை பெய்யும் என்று கூறி விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் தற்போது பெய்து வரும் மழையை யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த பெரு மழை தலைநகரையே பெரும் வெள்ளக்காடாக்கி விட்டது. மக்கள் அல்லோகல்லப்பட்டுப் போய் விட்டனர்.
இந்த நிலையில் துல்லியமாக மழை அளவைக் கணிக்கும் தொழில்நுட்பம் தற்போது இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
வசதி இல்லை
நீண்ட கால வானிலையை துல்லியமாக கணிக்கக்கூடிய தொழில்நுட்பம் இதுவரை வளரவில்லை. எங்கும் அந்த அளவுக்கு யாரும் துல்லியமாக கணிக்க முடிவதில்லை.
நாங்கள் சொன்னது இதுதான்
2015-ம்ஆண்டு தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான அளவுக்கு மழை பெய்ய 90 சதவீதம் வாய்ப்பு என்று இந்திய வானிலை மையம் அறிவித்து இருந்தது.
தவறாக புரிந்து கொண்டு விட்டனர்
ஆனால் அதை தவறாக புரிந்து கொண்டு இயல்பான அளவை விட 90 சதவீதம் அதிகமாக பெய்யும் என்று ஊடகங்களில் கூறி விட்டனர்.
சரியாகச் சொல்லுங்கள்
எனவே இப்படியான தவறான தகவல்களை மக்களுக்குத் தரக்கூடாது. வானிலை மைய அதிகாரிகள் சொல்லும் தகவல்களை நன்றாக புரிந்து கொண்டு பிரசுரியுங்கள் என்றார் தம்பி.