அதை விட அசிங்கம் வேற இல்லை... துரைமுருகன் ஆவேசம்
திருக்கோவிலூர்: அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் திமுக ஆட்சியமைக்க வேண்டும் என்று சிலர் சொல்கிறார்கள். அப்படிச் செய்தால் அதை விட அசிங்கம் வேறு இல்லை என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டு துரைமுருகன் பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சபாநாயகர் நடந்து கொண்டவிதத்தை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதே சமயம் வருகின்ற சட்டசபை கூட்டத்தொடரையும் பார்க்கத்தான் போகின்றீர்கள்.
அதிமுக எம்.எல்.ஏ. க்கள் நமக்கு ஆதரவு அளிக்க தயராக உள்ளதாகவும், அதனை பெற்று ஏன் திமுக ஆட்சி அமைக்கவில்லை என்றும் திமுகவினர் பலரே கேட்கிறார்கள். ஆதங்கப்படுகின்றனர். அந்தத் தவறை நாம் செய்து விடக் கூடாது. அதில் கருணாநிதி திட்டவட்டமாக உள்ளார்.
அதிமுக தயவில் நாம் ஆட்சி அமைத்தால் அதைவிட அசிங்கம் வேறு ஒன்றுமில்லை. திமுக எனும் மிகப்பெரிய இயக்கம், மக்களை சந்தித்து, மகத்தான வெற்றி பெற வேண்டும். இதுவே கருணாநிதியின் எண்ணம் ஆகும்.
அதற்காக நீங்கள் நீண்ட காலம் காத்திருக்கவேண்டிய அவசியமில்லை. விரைவில் சட்டசபை தேர்தல் வரும். அதுவரை பொறுமை காக்கவேண்டும் என்றார் துரைமுருகன்.