தமிழர்களுக்கு எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை - விக்னேஷ்வரன் ஒப்புதல்!
சென்னை: இலங்கையில் தமிழர் பகுதிகளில் எங்களால் தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை. இதற்காக வருந்துகிறோம் என்று வடக்கு மாகாண முதல்வர் விக்னஷ்வரன் கூறியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பள்ளியில் இன்று கே.ஜி.கண்ணபிரான் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
அதில், இலங்கை வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேசுவரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
விக்னேஷ்வரன் பேசியதிலிருந்து...
அதிகாரப் பகிர்வை எதிர்பார்க்க முடியவில்லை
இலங்கை வாழ் வடகிழக்கு தமிழ்பேசும் மக்கள் சார்பாக 1987-ம் ஆண்டில் ஏற்பட்ட உடன் படிக்கையில் இந்தியா கையெழுத்திட்டது. ஒற்றை ஆட்சி அரசியல் சட்டத்தின் கீழ் உண்மையான அதிகார பகிர்வை எதிர்பார்க்க முடியவில்லை.
அனைத்து அதிகாரங்களும் ராஜபக்சே கையில்
அனைத்து அதிகாரங்களும் இலங்கை மத்திய அரசு (அதிபர் ராஜபக்சே) கையில் உள்ளது.
தமிழர்களுக்காக பாடுபட முடியவில்லை
அதனால், இலங்கை வடக்கு மாகாணத்தில் தமிழர் நலனுக்காக பாடுபட முடியவில்லை. இப்பகுதி ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது இங்கு இந்த நிலைமை தான் உள்ளது.
செயல்பட விடாமல் தடுக்கும் சிங்கள அரசு
எங்களை சிங்கள அரசு செயல்பட விடாமல் தடுத்து வருகிறது. அதுதான் அவர்களது முக்கிய குறிக்கோளாக உள்ளது.
என்னைக் கேள்வி கேட்கிறார்கள்
அதிகாரமில்லாத வடக்கு மாகாண சபையில் முதல்வராக ஏன் இருக்கிறீர்கள் என கேள்வி கேட்கிறார்கள்.
வருத்தப்படுகிறோம்
தமிழர்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. அதனால் தமிழ் பேசும் மக்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. தமிழர் கிழக்கு மாகாணத்தில் சிங்களர் ஊடுருவல்கள் அதிகரித்து வருகிறது.
தமிழர் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கை சுதந்திரம் பெற்ற போது தமிழர் பகுதியில் 5 சதவீதம் பேர் மட்டுமே இருந்தனர். இப்போது எண்ணிக்கை 35 சதவீதமாக அதிகரித்து விட்டது என்றார் அவர்.