டிடிவி தினகரனை உறுப்பினராக கூட நாங்கள் ஏற்கவில்லை.. மாஃப. பாண்டியராஜன் பொளேர்!
சென்னை: டிடிவி தினகரனை துணை பொதுச்செயலாளராகவோ, உறுப்பினராகவோ நாங்கள் ஏற்கவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார்.
அதிமுகவில் பிளவுபட்டுள்ள இரு அணிகள் தனித்தனியே செயல்பட்டு வருகிறது. ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், முதல்வர் எடப்பாடி தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்து கிடக்கிறது. அணிகள் இணைவதற்கு இருதரப்பிலும் சாதகமான நிலை ஏற்படவில்லை. இருதரப்பிலும் முரணான கருத்துக்கள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவி வந்தது.
இதனைத் தொடர்ந்து அதிமுக அணிகள் இணைப்பிற்கான பேச்சுவார்த்தை குழு கலைக்கப்படுவதாக சமீபத்தில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். இதனிடையே இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்தாக கூறப்படும் வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த டிடிவி தினகரன், கட்சிப் பணிகளை மேற்கொள்ளப்போவதாக கூறினார். இதற்கு சில அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். திடீரென டிடிவி தினகரனை சந்தித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதுவரை அவருக்கு 34 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கட்சி இணைப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்னும் 60 நாட்கள் காத்திருப்பேன் இல்லை என்றால் நானே கட்சியை இணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என்று நேற்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ் ஆதரவு மாஃப. பாண்டியராஜன், அணிகள் இணைப்புக்கு தினகரன் கொடுத்த 60 நாள் கெடுவுக்கு நாங்கள் அங்கீகாரம் தரவில்லை என்றும் தினகரனை துணை பொதுச்செயலாளராகவோ, உறுப்பினராகவோ நாங்கள் ஏற்கவில்லை என்றும் அவர் கூறினார்.