பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவிடம் கைரேகை வாங்கவில்லை - ஹைகோர்ட்டில் அதிகாரி விளக்கம்
சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றபோது பரப்பன அக்ரஹாரா சிறையில் கைரேகை எதுவும் பதிவு செய்யவில்லை என்று மோகன்ராஜ் சாட்சியம் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ஜெயலலிதா கைரேகை வழக்கில் பெங்களூரு அக்ரஹாரா சிறை அதிகாரி மோகன்ராஜ் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைசென்றபோது கைரேகை எதுவும் பதிவு செய்யவில்லை என்று மோகன்ராஜ் சாட்சியம் அளித்துள்ளார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல், தஞ்சாவூர், அரவக்குறிச்சி மறுதேர்தல்களில் அதிமுகவினரின் வேட்பு மனுக்களில் ஜெயலலிதாவின் கையெழுத்துக்கு பதில் கைரேகை வைக்கப்பட்டது. தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன் தேர்தல் முடிவுக்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸின் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடுத்தார்.
அதிமுக வேட்பாளர் தனது வேட்பு மனுவின் ஏ, பி படிவங்களில் ஜெயலலிதாவின் கைரேகை பெற்றதில் முறைகேடுகள் இருப்பதால் போஸின் வேட்புமனுவே செல்லாது என்பதுதான் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கின் நோக்கம்.
இந்த வழக்கு பல கட்டங்களில் பரபரப்பான விசாரணைகளை கடந்துள்ளது. கையெழுத்து பெற்ற டாக்டர் பாலாஜி ஆஜராகி சாட்சியம் அளித்துள்ளார்.
தேர்தல் மனுவில் இருக்கும் ஒரு பகுதியை சுட்டிக் காட்டிய நீதிபதி, தாமாகவே முன் வந்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் கண்காணிப்பாளருக்கு ஒரு சம்மனை அனுப்ப உத்தரவிட்டார்.
சிறையில் ஜெயலலிதா கைரேகை
அதாவது சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றபோது ஜெயலலிதாவிடம் பரப்பரன அக்ரஹார சிறையில் கைரேகை பெற்றிருப்பார்கள். தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் அனைவரது கைரேகையும் சிறையில் பெறப்படும். அந்த வகையில், ஜெயலலிதாவின் கைரேகைப் பதிவுகள் பரப்பன அக்ரஹார சிறை ஆவணப் பதிவேட்டில் இருக்கும். அந்தக் கை ரேகைப் பதிவுகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 8 ஆம் தேதிக்குள் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
ஜெயலலிதா ஆதார் அட்டை
ஜெயலலிதா ஆதார் அட்டை வைத்திருந்தாரேயானால், அவரது ஆதார் அட்டைக்காக பதிவு செய்யப்பட்ட கை ரேகை மாதிரிகளை நீதிமன்றத்திடம் ஒப்படைக்குமாறு ஆதார் சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார் நீதிபதி.
கைரேகை, ஆதார் அட்டை
வேட்பு மனுக்களில் இடம்பெற்றிருக்கும் ஜெயலலிதாவின் கை ரேகை, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் ஜெயலலிதாவின் கை ரேகை, ஆதார் அட்டையில் இருக்கும் ஜெயலலிதாவின் கை ரேகை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக சம்மன் அனுப்பிய நீதிபதி டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் இந்த கை ரேகை பதிவுகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். டிசம்பர் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
கைரேகை பதிவு செய்யவில்லை
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை அதிகாரி மோகன்ராஜ் உயர்நீதிமன்றத்திற்கு இன்று ஆஜரானார் சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைசென்றபோது வைத்த கைரேகை ஆவணத்தை அதிகாரி எடுத்துவந்ததாக கூறப்பட்ட நிலையில் ஜெயலலிதாவிடம் சிறையில் கைரேகை எதுவும் பெறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இது ஜெயலலிதா கைரேகை வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.