எங்க அண்ணன் உடலை டெல்லி எய்ம்ஸ்சில் போஸ்மார்ட்டம் பண்ணாதீங்க.. முத்து கிருஷ்ணன் தங்கை கதறல்
எங்கள் அண்ணன் உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் போஸ்மார்ட்டம் பண்ணாதீர்கள் என்று மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ள ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணனின் தங்கை கண்ணீர் விட்டு கதறி அழுத்தார்.
சேலம்: டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் சேலத்தைச் சேர்ந்த மாணவர் முத்துக் கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கு அவர்களது குடும்பத்தினர் கடும் எதிரப்பு தெரிவித்துள்ளனர்.
டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.பில் பயின்று வந்த சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற மாணவர் நேற்றிரவு தனது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டெல்லியில் உள்ள முனிர்கா விஹார் பகுதியில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்த முத்துக்கிருஷ்ணன் தனது நண்பர்களிடம் உறங்க செல்வதாகக் கூறியுள்ளார். பின்னர், அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
இதனை கடுமையாக மறுத்துள்ளனர் அவரது குடும்பத்தினர். இந்த மரணம் தற்கொலையாக இருக்காது என்று அவரது சகோதரி அணித்தரமாக கூறினார். அவரது அண்ணன் குறித்து மேலும் அவர் கூறியதாவது;
கோழையல்ல
சேலத்திலேயே தொடர்ந்து பொதுப் பிரச்சனைகளுக்காக போராடியவர் எங்கள் அண்ணன். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற பேச்சுக்கே இல்லை. நல்ல கவிஞராகவும், பணியளவில் பேராசிரியராக வர வேண்டும் என்பதே அவரது கனவு. எனவே, அவர் தற்கொலை செய்திருக்கவே மாட்டார்.
மெரிட் மாணவர்
எங்கள் அண்ணன் நன்றாக படிப்பவர். அவர் நல்ல மதிப்பெண்கள் எடுத்ததால் மெரிட்டில் அவருக்கு ஜேஎன்யூவில் இடம் கிடைத்தது. படித்து பட்டம் பெற்று திரும்புவார் என்று நினைத்தோம். ஆனால் இப்படி மரணச் செய்தி வந்து எங்களை நிலை குலைய வைத்துள்ளது.
மரணத்தில் சந்தேகம்
ரோகித் வெமுலா மரணம் தொடர்பான எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றவர் எங்கள் முத்துகிருஷ்ணன். இது மட்டுமல்லாமல் பல போராட்டங்களில் பங்கேற்றவர். அதனால் எங்களுக்கு அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தோன்றுகிறது.
குடும்ப பிரச்சனை காரணமா?
மரணத்திற்கு குடும்ப பிரச்சினை காரணமல்ல. எங்களுக்கு எவ்வளவு பணக்கஷ்டம் இருந்தாலும் அது தெரியாமல் அவரை படிக்க வைத்தோம். அவருக்கு குடும்பப் பிரச்சனை இருந்தது அல்லது மன உலைச்சல் இருந்தது அதனால்தான் தற்கொலை செய்து கொண்டார் என்பதெல்லாம் பச்சைப் பொய்.
எய்ம்ஸ்சில் வேண்டாம்
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முத்துகிருஷ்ணனின் உடலை போஸ்மார்ட்டம் செய்ய வேண்டாம். எங்களுக்கு அந்த மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை. எங்கள் அண்ணனின் உடலை எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று முத்துகிருஷ்ணன் சகோதரி கதறினார்.