ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது முதலீடு; தென்மாவட்ட முதலீட்டாளர்களுக்கு சிறப்பு சலுகைகள்: முதல்வர் ஜெ.
சென்னை: தமிழக அரசு இலக்கு நிர்ணயித்த ரூ1 லட்சம் கோடியைத் தாண்டி முதலீடுகள் வந்துள்ளதாகவும் தென் தமிழ்நாட்டில் முதலீடு செய்வோருக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்படும் என்றும் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னையில் முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது. இந்திய அளவில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் 3வது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் இருக்கிறது. சேவைத் துறையில் தமிழகம் இதர மாநிலங்களை விட மிகவும் சிறந்து விளங்குகிறது.
பொருளாதார முன்னேற்றத்தில் 2வது மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; வாகன உற்பத்தியில் தமிழகம் தேசிய மையமாக திகழ்கிறது.
தற்போது இலக்கை தாண்டிய அளவாக ரூ1 லட்சம் கோடியை தாண்டி முதலீடு வந்துள்ளது. இதுபற்றிய முழு விவரங்களை நாளை அறிவிக்கிறேன்.
2011ஆம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்ற போது மின்பற்றாக்குறையுள்ள மாநிலமாக தமிழகம் இருந்தது. கடந்த 4 ஆண்டுகளில் மின்பற்றாக்குறை முழுமையாக நீக்கப்பட்டு மின்மிகை மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முதலீடு செய்வோருக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும். தமிழகத்தில் தொடங்க 30 நாட்களுக்குள் அனுமதி வழங்கப்படும்.
தமிழகம் சூரிய மின்சக்தி உற்பத்தியில் அபார வளர்ச்சியடைந்துள்ளது. கட்டிட கூரைகளில் மின் உற்பத்தி செய்வதில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் வகிக்கிறது.
நாட்டில் சிறு, குறு தொழில்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான சமூக அமைதி நிலவுகிறது. தமிழகத்தின் தொழில் திட்டங்களை நிறைவேற்ற மத்திய அமைச்சர்கள் உதவ முன்வர வேண்டும்
1992-ல் நான் வகுத்து தொழில் கொள்கையில் தற்போது பலன் ஏற்பட்டுள்ளது. 2023-ல் தமிழ் நாட்டில் தனி நபர் வருமானம் முன்னேறிய நாட்டு மக்களுக்கு இணையாக உயரும். காஞ்சிபுரம் அருகே வல்லம் வடகாலில் யமாஹா ஒரு தொழிற்சாலையை தொடங்குகிறது.
உலகம் முன்னேறும் போது தமிழகமும் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.