''இரட்டை தலைமை எங்களுக்கு பழகிப்போன ஒன்றுதான்''.. உண்மையை போட்டுடைத்த முன்னாள் அமைச்சர்!
கோவில்பட்டி: இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிருபர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:-
ஊரக உள்ளாட்சி தேர்தல் என்றால் உள்ளூர் பிரச்சினையை மையமாக வைத்துதான் நடக்கிறது. கட்சிகள் என்னதான் அரசியல் ரீதியாக கூட்டணி அமைத்தாலும், தலைவர்கள் மட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டாலும், அதையும் தாண்டி கீழ் மட்டத்தில் உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில வேட்பாளர்கள் போட்டியிடுவது இயற்கை. எதிர்க்கட்சி தலைவரின் ஆலோசனையின்படி போட்டி வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களை அழைத்து பேசி கிட்டத்தட்ட 100 சதவீதம் சரி செய்யப்பட்டு விட்டது.
அசைன்மெண்ட் தந்த பாஜக.. பறக்கும் ரிப்போர்ட்கள்.. கலங்கும் எம்எல்ஏக்கள்.. 7 மாநில தேர்தல் பரபரப்பு
வாக்குறுதிகள் எங்கே?
தி.மு.க ஆளும் கட்சியாக வந்த 4 மாதங்களில் தேர்தலின்போது வழங்கிய 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டது என பெருமையாக கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் முக்கியமாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த நீட் தேர்வு இன்று கானல் நீராகி விட்டது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிட்டது. 3 பேர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதே போல், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடியில் சில சட்டதிட்டங்களை புகுத்தி 40 சதவீதம் பேர்தான் பயனடையும் நிலை உள்ளது.
தி.மு.க ஆட்சி ஏமாற்றம்
தாலிக்கு தங்கம் திட்டத்தில் நிபந்தனை விதித்துள்ளனர். மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி, அம்மா இருசக்கர வாகன திட்டம் தேவைப்படாது என கூறுகின்றனர். ஜெயலலிதா கொண்டு வந்த காரணத்தால் இந்த திட்டத்தை கைவிட்டனர். இப்படி 4 மாதங்களிலேயே மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் கூட வருத்தப்படும் நிலை இன்றைக்கு இருக்கிறது. தி.மு.க ஆட்சி ஏமாற்றத்தை தந்துள்ளது. இது நிச்சயம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்.
அ.தி.மு.க வெற்றி பெறும்
குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் அறிக்கைகள் விடுகின்றனர். சட்டமன்றத்திலும் இணைந்து தான் பணியாற்றினர். ஒருங்கிணைப்பாளர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியால், அவர் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக இணை ஒருங்கிணைப்பாளர் முதற்கட்டமாக 9 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அங்கிருந்தே எங்களுக்கு ஆலோசனைகள் கூறுகிறார்.
ஒருமித்த கருத்து
இரண்டு பேரும் ஒருமித்த கருத்துடன் தான் உள்ளனர். இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்று. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரட்டை தலைமையில்தான் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்துவிட்டோம். இதில் ஒருமித்த கருத்துடன் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். எந்தவித கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எனவே அதில் எந்த பிரச்சினையும் எழ வாய்ப்பில்லை.