வனத்துறைக்கு பயந்து ஆழம் தெரியாத ஏரியில் குதித்தோம்.. ஆந்திராவில் இருந்து தப்பிய தமிழர் பேட்டி
ஆந்திராவின் கடப்பாவில் வனத்துறையினரை பார்த்ததும் ஆழம் தெரியாமல் ஏரியில் குதித்தோம் என்று அங்கு இருந்து தப்பிய தமிழர் பேட்டி அளித்துள்ளார்.
சேலம்: ஆந்திராவின் கடப்பாவில் வனத்துறையினரை பார்த்ததும் ஆழம் தெரியாமல் ஏரியில் குதித்தோம் என்று அங்கு இருந்து தப்பிய தமிழர் பேட்டி அளித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஒண்டிமிட்டா வனப்பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு உள்ள ஏரியில் 5 தமிழர்களின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மொத்தமாக 7 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.
செம்மரம் வெட்டிக்கடத்தியவர்களை போலீசார் விரட்டியபோது அவர்கள் ஏரியில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர போலீஸ் கூறியது. இது ஆந்திர போலீஸாரின் திட்டமிட்ட கொலை என தமிழ் அமைப்புகள் குற்றம் சாட்டு வைத்து இருந்தது.
இந்த நிலையில் அந்த பகுதியில் இருந்து தப்பிய சேலம் அடியனூரை சேர்ந்த முருகேசன் என்பவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்து இருக்கிறார்.
அதில் ''ஆந்திராவின் கடப்பாவில் வனத்துறையினரை பார்த்ததும் ஆழம் தெரியாமல் ஏரியில் குதித்தோம். செம்மரம் வெட்டுவதற்காகத்தான் அழைத்துச் சென்றார்கள் என்பது குறித்து தெரியாது. எங்களை அழைத்து சென்று ஏமாற்றிவிட்டார்கள்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.