அதிமுகவின் பொதுச்செயலாளரை நீக்கும் உரிமை எங்களுக்கு இல்லை... தம்பிதுரை விளக்கம்!
அதிமுகவின் பொதுச்செயலாளரை நீக்கும் உரிமை எங்களுக்கு இல்லை என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
சென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளரை நீக்கும் உரிமை எங்களுக்கு இல்லை என தம்பிதுரை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் நடக்கிறது பாஜக ஆட்சி இல்லை என்றும் அவர் கூறினார்.
சசிகலா அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளார். இதனால் அந்த அணியில் உச்சக்கட்ட குழப்பம் நிலவி வருகிறது.
சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டிடிவி தினகரனையும் ஓபிஎஸ் அணி ஒதுக்கி வைத்து விட்டது. இதனால் செய்வதறியாமல் திணறி வருகிறார் டிடிவி தினகரன்.
நீக்கும் அதிகாரமில்லை
இந்நிலையில் சசிகலா, டிடிவி தினகரனின் ஆதரவாளரான லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவின் பொதுச் செயலாளரை நீக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்று அவர் கூறினார்.
பாஜக ஆட்சி அல்ல
அதிமுகவின் தலைமைக் கழகம் யார் என்பது மக்களுக்கு தெரியும் என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சிதான் நடைபெறுகிறது என்றும் பாஜகவின் ஆட்சி அல்ல என்றும் தம்பிதுரை கூறினார்.
ஆன்மீகத்தை நம்புகிறார்
ஆன்மீகத்தை நம்புவதால் தான் ஸ்டாலின் குளங்களை தூர் வாரி வருகிறார் என்றும அவர் கூறினார். அதிமுகவில் எந்த அணிகளும் இல்லை என்றும் கருத்து வேறுபாடு மட்டும் தான் உள்ளது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.
எடப்பாடி அரசு சிறப்பு
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளித்ததாகவும் அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகிறது என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.